வியாபாரிகள் புகார் எதிரொலி: நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் அதிரடி மாற்றம்


வியாபாரிகள் புகார் எதிரொலி: நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் அதிரடி மாற்றம்
x
தினத்தந்தி 23 Jun 2020 4:47 AM GMT (Updated: 23 Jun 2020 4:47 AM GMT)

வியாபாரிகள் புகாரை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இருந்தவர் சரவணக்குமார். இவர் சாலை விரிவாக்கம் செய்யப்படுவதாக கூறி சாலையோர கட்டிடங்களின் சிலவற்றை இடிக்க உத்தரவிட்டார். அதன்படி கட்டிடங்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வந்தனர். கொரோனா ஊரடங்கில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்த வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆணையரின் செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் கட்டிடங்களை இடிக்க வியாபாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும், மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு வியாபாரிகள் சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டது.

அதிரடி மாற்றம்

இந்தநிலையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழக அரசின் பொதுத்துறை துணைச் செயலாளராக பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆஷா அஜித் நியமிக்கப்பட்டுள்ளார். விடுப்பில் இருந்து வந்த அவர், பணிக்கு திரும்பியதை அடுத்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் நேற்று அதிரடியாக பிறப்பித்துள்ளார்.

இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மாநகராட்சி ஆணையர் சரவணக்குமாருக்கு வேறு பணி இன்னும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story