தேனியில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்: நகராட்சி பகுதிகளில் கடைகள் அடைப்பு


தேனியில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்: நகராட்சி பகுதிகளில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 26 Jun 2020 2:20 AM GMT (Updated: 26 Jun 2020 2:20 AM GMT)

தேனியில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நகராட்சி பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வெளி மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தேனி,

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை 421 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் ஏற்கனவே முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால் தேனி, போடி, சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய நகராட்சி பகுதிகளிலும் புதிய கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு நேற்று முன்தினம் மாலை 6 மணியில் இருந்து அமலுக்கு வந்தது.

மளிகை கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள், மருந்துக்கடைகள் மற்றும் கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. டீக்கடை, ஜவுளிக்கடை, நகைக்கடை, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளிட்ட இதர கடைகளை மூடவும், ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

கடைகள் அடைப்பு

இதையடுத்து தேனி, கம்பம் உள்ளிட்ட 5 நகராட்சிகளிலும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் திறந்து இருந்தன. மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. தேனி நகரின் பிரதான கடைவீதிகளான பகவதியம்மன் கோவில் தெரு, எடமால் தெரு ஆகியவை வெறிச்சோடி கிடந்தன. சாலைகளிலும் வாகன போக்குவரத்து குறைவாக காணப்பட்டது.

அதேநேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு, தேனிக்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் வந்ததால் காலை நேரத்தில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்பட்டது. பிற்பகலுக்கு பிறகு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பஸ்கள் நிறுத்தம்

தேனியில் இருந்து பிற மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய பகுதிகளுக்கு நேற்று முன்தினம் வரை பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று வெளிமாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டன. மாவட்டத்துக்குள் ஏற்கனவே 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. நேற்று அந்த எண்ணிக்கையும் பாதியாக குறைக்கப்பட்டன.

குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் இயங்கியதால், பகல் நேரத்தில் பஸ் நிலையத்தில் பஸ்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்சில் குறைவான எண்ணிக்கையில் மக்கள் பயணம் செய்ததால் பெரும்பாலான பஸ்கள் குறைவான பயணிகளுடன் இயங்கின.

Next Story