“தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


“தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 26 Jun 2020 11:30 PM GMT (Updated: 26 Jun 2020 7:10 PM GMT)

“தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்“ என்று, குடும்பத்தினரிடம் ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கிய பிறகு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கயத்தாறு, 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை-மகனான வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று சாத்தான்குளத்தில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டுக்கு சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர், அரசு அறிவித்த ரூ.20 லட்சம் நிவாரண நிதியை ஜெயராஜ் மனைவி செல்வராணியிடம் வழங்கினார்.

அப்போது மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, சண்முகநாதன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து கயத்தாறில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சாத்தான்குளத்தில் தந்தை- மகன் உயிரிழந்த சம்பவத்தில், அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி, உடற்கூராய்வு செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

துயரமான இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்க கூடாது என்பதற்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டும் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஐகோர்ட்டு என்ன உத்தரவு, தீர்ப்பு வழங்குகிறதோ? அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சரும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story