திருச்சியில் இருந்து செங்கல்பட்டு, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து


திருச்சியில் இருந்து செங்கல்பட்டு, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து
x
தினத்தந்தி 28 Jun 2020 1:13 AM GMT (Updated: 28 Jun 2020 1:13 AM GMT)

திருச்சியில் இருந்து செங்கல்பட்டு, நாகர் கோவிலுக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

திருச்சி,

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கடந்த 1-ந்தேதி முதல் தமிழகத்தில் 7 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த ரெயில்கள் நாளை முதல் ஜூலை மாதம் 15-ந்தேதி ரத்து வரை செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக அரசின் வேண்டுகோளின்படி தெற்கு ரெயில்வேயின் கீழ் இயங்கும் கீழ்க்கண்ட சிறப்பு ரெயில்கள் வருகிற 29-ந்தேதி முதல் ஜூலை மாதம் 15-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

அந்தவகையில், திருச்சி-செங்கல்பட்டு (வழி விருதாச்சலம்), மதுரை-விழுப்புரம், கோவை-காட்பாடி, திருச்சி-செங்கல்பட்டு (வழி மயிலாடுதுறை), அரக்கோணம்-கோவை, கோவை-மயிலாடுதுறை, திருச்சி-நாகர்கோவில் ஆகிய வழிதடங்களில் இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

கட்டணம் திருப்பி வழங்கப்படும்

ரத்து செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்களுக்கான முழு கட்டணமும் திருப்பி வழங்கப்படும். ‘ஆன்-லைன்’ மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு, வங்கி கணக்கில் நேரடியாக கட்டணம் திருப்பி வழங்கப்படும். கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் பயண தேதியில் இருந்து 6 மாதம் வரை கவுண்டர்களில் பெற்று கொள்ளலாம். சென்னை சென்டிரல்-டெல்லி இடையே இயக்கபட்டு வரும் ராஜ்தானி சிறப்பு ரெயில் வழக்கம் போல் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story