குற்றாலத்தில் அரியவகை மரத்தை வெட்டிய வழக்கு:இலஞ்சி கிராம நிர்வாக அதிகாரி ‘சஸ்பெண்டு’


குற்றாலத்தில் அரியவகை மரத்தை வெட்டிய வழக்கு:இலஞ்சி கிராம நிர்வாக அதிகாரி ‘சஸ்பெண்டு’
x
தினத்தந்தி 28 Jun 2020 10:15 PM GMT (Updated: 28 Jun 2020 7:01 PM GMT)

குற்றாலத்தில் அரியவகை மரத்தை வெட்டிய வழக்கில் இலஞ்சி கிராம நிர்வாக அதிகாரி ‘சஸ்பெண்டு‘ செய்யப்பட்டார்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி பகுதியில் இலஞ்சி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட புறம்போக்கு நிலத்தில் மிகப்பழமையான முதிர்ந்த 2.38 மீட்டர் சுற்றளவு உள்ள ஈட்டி எனக்கூறப்படும் தோதகத்தி மரம் வெட்டிய நிலையில் இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த குற்றாலம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் இதனை சிவராம பேட்டையை சேர்ந்த சாமி (வயது 47), அச்சன்புதூரை சேர்ந்த வேலுச்சாமி மகன் முத்துராஜ் (33), முருகையா(52) ஆகியோர் மரம் வெட்டியது தெரியவந்தது. இவர்களை வனத்துறையினர் பிடித்து அவர்களிடமிருந்து வெட்டிய மரத்தை கைப்பற்றினர்.

இந்த மரம் பல லட்சம் பெறுமானது என்று கூறப்படுகிறது. இது அரிய வகை மரம் என்பதால் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டு செங்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சங்கரன்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாவட்ட வன அலுவலர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் இந்த வழக்கை குற்றாலம் வனச்சரகர் பாலகிருஷ்ணன், பயிற்சி வனச்சரக அலுவலர் பிரபாகரன், வனவர்கள் பாண்டியராஜ், அழகர்ராஜ் ஆகியோர் மேல் விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக இலஞ்சி கிராம நிர்வாக அதிகாரி நடராஜன் மற்றும் மர அறுவை மில் உரிமையாளர் பாலகிருஷ்ணன் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கிராம நிர்வாக அதிகாரி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வருவாய் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார், கிராம நிர்வாக அதிகாரி நடராஜனை ‘சஸ்பெண்ட்‘ (பணியிடை நீக்கம்) செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து வனத்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story