ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி 2 மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி 2 மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 29 Jun 2020 3:02 AM GMT (Updated: 29 Jun 2020 3:02 AM GMT)

நெல்லிக்குப்பம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளகேட் பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் ஏ.டி.எம். மையத்துக்குள் இருந்த எந்திரம் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் தலைமையில் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டனர். அப்போது எந்திரத்தின் வெளிப்பகுதி முழுவதும் உடைந்து தொங்கி கொண்டிருந்தது.

கண்காணிப்பு கேமராவில் ஆய்வு

பின்னர் போலீசார், ஏ.டி.எம். மையத்துக்கு எதிரே உள்ள வீட்டில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நேற்று அதிகாலை 3 மணி அளவில் மர்ம நபர்கள் 2 பேர் ஏ.டி.எம் மையத்திற்குள் சென்று உடனே மின் இணைப்பை துண்டித்துள்ளனர். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை சிறிதுநேரம் உடைத்தனர். ஆனால் எந்திரத்தில் உள்ள லாக்கரை உடைக்க முடியாததால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

வலைவீச்சு

இதையடுத்து போலீசார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எம். எந்திரத்தில் எவ்வளவு பணம் இருந்தது என்பது குறித்து வங்கி அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அதிகாலையில் மர்மநபர்கள் 2 பேர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story