நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் விலை கடும் வீழ்ச்சி கிலோ ரூ.80-க்கு விற்பனை


நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் விலை கடும் வீழ்ச்சி கிலோ ரூ.80-க்கு விற்பனை
x
தினத்தந்தி 29 Jun 2020 3:39 AM GMT (Updated: 29 Jun 2020 3:39 AM GMT)

நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.80-க்கு விற்பனை ஆனது.

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை தாலுகாவில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். அதிலும் பூக்கள் சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நிலக்கோட்டை பகுதிகளில் சாகுபடியாகும் பூக்களுக்கு மவுசு அதிகம் என்பதால் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டுக்கு வந்து தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கிச்செல்வார்கள்.

இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைத்து வந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக வெளி மாவட்டம், வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டுக்கு வருவதில்லை. உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே பூக்களை வாங்கிச்செல்கின்றனர்.

விலை வீழ்ச்சி

இதன் காரணமாக மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ரூ.40-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சம்மங்கி பூக்கள் தற்போது ரூ.8-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் ரூ.300-க்கு விற்பனை ஆன ஒரு கிலோ மல்லிகை ரூ.150-க் கும், ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட கனகாம்பரம் ரூ.80-க்கும், ரூ.200-க்கு விற்கப்பட்ட பிச்சி, முல்லைப்பூக்கள் தலா ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து நிலக்கோட்டையை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுவிடும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். இதே நிலை தொடர்ந்தால் எங்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும். எனவே வெளி மாவட்டங்களுக்காவது பூக்களை கொண்டு சென்று விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Next Story