பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Jun 2020 11:25 PM GMT (Updated: 29 Jun 2020 11:25 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசினார்.

இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், செயல் தலைவர்கள் வசந்தகுமார் எம்.பி., மயூரா ஜெயக்குமார், ரூபி மனோகரன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் பழனி நாடார், மாநில பொதுச் செயலாளர் வானமாமலை, மாநில விவசாய அணி செயலாளர் எஸ்.பால்ராஜ், விவசாய பிரிவு மாநில செயலாளர் விவேக் எம்.முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார், ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க நிர்வாகி கே.பி.கே.ஜெயக்குமார், சக்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை ஏறி இருக்கிறது. மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, நிதி மந்திரியாக சிதம்பரம் இருந்தார். அப்போது சோனியா காந்தி ஆலோசனை பேரில் ஒரு கொள்கை வகுக்கப்பட்டது. அது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறும் போது அதன் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய கம்பெனிகள் ஏற்றிக் கொள்ளலாம். கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துக் கொள்ளலாம் என்பதுதான்.

காங்கிரஸ் ஆட்சியில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 106 டாலராக இருந்த போது பெட்ரோல், டீசல் விலை தற்போதைய விலையை விட குறைவாக இருந்தது. ஆனால் தற்போது 16 டாலராக விலை குறைந்த பிறகும், பெட்ரோல், டீசல் விலை குறையாமல் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை கிடையாது. கொரோனாவால் பொது மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மேலும் விலைவாசி உயரும். பொருளாதாரத்தை பாதிக்கச்செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இதை பொதுமக்களிடம் கொண்டு சென்று சேர்க்க ராகுல் காந்தி உத்தரவுப்படி நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம்.

சாத்தான்குளம் வியாபாரிகள் 2 பேரை போலீசார் தாக்கி கொலை செய்திருப்பது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உடனடியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரை செய்ய வேண்டும். இதில் அவர் காலம் தாழ்த்த கோர்ட்டு நடவடிக்கைகளை காரணம் காட்டுகிறார். சாத்தான்குளம் நிகழ்வு யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு சரியாக செயல்படாததால் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேர் வீதம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். இதேபோல் செங்கோட்டையிலும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சாத்தான்குளத்தில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீட்டுக்கு சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர், காங்கிரஸ் கட்சி சார்பில், ஜெயராஜின் மனைவி செல்வராணியிடம் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

Next Story