ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த போலீசார் தீவிர வாகன தணிக்கை கிழக்கு, மேற்கு விரைவு சாலையில் போக்குவரத்து நெரிசல்


ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த போலீசார் தீவிர வாகன தணிக்கை கிழக்கு, மேற்கு விரைவு சாலையில் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 30 Jun 2020 1:06 AM GMT (Updated: 30 Jun 2020 1:06 AM GMT)

ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தும் நோக்கில் போலீசார் தீவிர வாகன தணிக்கையால் ஈடுபட்டனர். இதனால் மும்பை கிழக்கு, மேற்கு விரைவு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மும்பை,

மும்பையில் ெகாரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அலுவலகம் மற்றும் மருத்துவ தேவைகள் இன்றி வீடுகளில் இருந்து 2 கி.மீ. தூரத்துக்கு மேல் வெளியில் செல்ல கூடாது என போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். இந்த உத்தரவை செயல்படுத்த நேற்று போலீசார் மும்பையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

மும்பையில் உள்ள முக்கிய சாலைகளில் 2 அல்லது 3 கி.மீ. இடைவெளியில் தடுப்புகளை அமைத்து சோதனையில் ஈடுபட்டனர். மேலும் தேவையின்றி வெளியே சுற்றியவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதுவரை போலீசார் மும்பையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

நேற்று போலீசார் நடத்திய வாகன தணிக்கையால் மும்பையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக கிழக்கு, மேற்கு விரைவு சாலைகளில் வாகனங்கள் பல கி.மீ. நீளத்துக்கு அணிவகுத்து நின்றன. மேற்கு விரைவு சாலையில் தகிசர் பகுதி, கிழக்கு விரைவு சாலையில் முல்லுண்டு சுங்க சாவடி பகுதிகளில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் அலுவலகம் செல்பவர்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் சென்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் மும்பை போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

மும்பை போலீசாரின் தீவிர வாகன தணிக்கைக்கு பலர் டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் எதிர்ப்பை பதிவு செய்து இருந்தனர்.

Next Story