திருவாரூர் ரவுடி கொலையில் திடுக்கிடும் தகவல்: ஜாமீனில் எடுத்து நண்பர்களே தீர்த்துக்கட்டிய பயங்கரம்


திருவாரூர் ரவுடி கொலையில் திடுக்கிடும் தகவல்: ஜாமீனில் எடுத்து நண்பர்களே தீர்த்துக்கட்டிய பயங்கரம்
x
தினத்தந்தி 10 July 2020 1:02 AM GMT (Updated: 10 July 2020 1:02 AM GMT)

திருவாரூரில் நடந்த பிரபல ரவுடி கொலை வழக்கில், அவரது நண்பர்களே ஜாமீனில் எடுத்து தீர்த்து கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 9 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருவாரூர்,

திருவாரூர் பெரிய மில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து என்கிற கராத்தே மாரிமுத்து(வயது 35). இவருக்கு திருமணமாகி புனிதா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். பிரபல ரவுடியான இவர் மீது திருவாரூர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் ஆயுதங்களுடன் வழிபறி கொள்ளையில் ஈடுபட முயன்ற வழக்கில் போலீசார் மாரிமுத்துவை கைது செய்து நாகை கிளை சிறையில் அடைத்தனர்.

கடந்த 7-ந் தேதி அன்று மாலை நாகை கிளை சிறையில் இருந்து மாரிமுத்து ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் அன்று இரவு வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு வந்து சேரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மாரிமுத்துவை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மறுநாள்(8-ந் தேதி) காலை திருவாரூர் மில் தெரு அருகில் உள்ள ரெயில் நிலைய குட்ஷெட் பகுதியில் தார்பாயில் சுற்றி வீசப்பட்ட நிலையில் மாரிமுத்துவின் உடல் கிடந்தது. அவரை யாரோ கொலை செய்து உடலை தார்ப்பாயில் வைத்து சுற்றி அங்கு கொண்டு வந்து வீசி விட்டு சென்று இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மாரிமுத்து பிரபல ரவுடி என்பதாலும், அவர் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதாலும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் அவரை கொலை செய்து இருக்கலாமா? அல்லது ரவுடிகளுக்கு இடையே உள்ள மோதல் காரணமாக அவரை வேறு ரவுடிகள் யாரேனும் கொன்று இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் ஜாமீனில் வெளியில் வந்த மாரிமுத்துவை அழைக்க அவருடைய நண்பர்கள் ஒரு வாடகை காரில் நாகைக்கு சென்றதும், அவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனால் இந்த கொலை வழக்கில் அவர்களுக்கு தொடர்பு இருக்குமோ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி மாரிமுத்துவுடன், அதே வழக்கில் தொடர்புடைய மணி என்பவரும் கைது செய்யப்பட்டதும், இருவரும் ஒன்றாக ஜாமீனில் வெளியில் வந்ததும் தெரிய வந்ததையடுத்து போலீசார் மணியை தேடினர். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் மணி சிக்கினார்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது:-

ஜாமீனில் வந்த மாரிமுத்து, மணி ஆகிய இருவரையும் திருவாரூர் மில் தெருவை சேர்ந்த வினோத் மற்றும் அவரது நண்பர்கள் வாடகை காரில் அழைத்து வந்துள்ளனர். திருவாரூர் வரும் வழியில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் மது போதையில் இருந்த மாரிமுத்துவை அவரது நண்பர்களே ஒன்று சேர்ந்து சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் நள்ளிரவில் மாரிமுத்துவின் உடலை தார்ப்பாயில் சுற்றி திருவாரூர் ரெயில்வே குட்ஷெட் பகுதியில் வீசி விட்டு சென்று உள்ளனர்.

கொலை செய்யப்பட்ட மாரிமுத்து அதே பகுதியில் உள்ள இளைஞர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மாரிமுத்துவின் நண்பர்கள் உதவியுடன் அவரை தீர்த்து கட்ட திட்டமிட்டனர். அதன்படி நண்பர்கள் மூலம் மாரிமுத்துவை ஜாமீனில் வெளியில் எடுத்து கொலை செய்து உள்ளனர்.

மணி கொடுத்த தகவலின் பேரில் பூந்தோட்டத்தில் தலைமறைவாக இருந்த வினோத்தை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் மணி, வினோத் ஆகிய இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தலைமறைவாகி விட்ட 9 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பிரபல ரவுடி மாரிமுத்துவை அவரது நண்பர்களே திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story