கண்மாய் மடையை சரிசெய்ய வலியுறுத்தி ஊரைவிட்டு வெளியேற கிராம மக்கள் முடிவு


கண்மாய் மடையை சரிசெய்ய வலியுறுத்தி ஊரைவிட்டு வெளியேற கிராம மக்கள் முடிவு
x
தினத்தந்தி 10 July 2020 5:01 AM GMT (Updated: 10 July 2020 5:01 AM GMT)

ராமநாதபுரம் மாவட்டம் நாரணமங்கலம் ஊராட்சி திம்மாபட்டி கிராமத்தை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் திரளாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம்,

 எங்கள் கிராமத்தில் உள்ள கண்மாய் மடைகள் பழுதடைந்து உள்ளதால் அதில் சேரும் தண்ணீர் வெளியேற முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த கண்மாயை நம்பி உள்ள 150 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற முடியாத நிலை இருந்து வருகிறது.

இதுதொடர்பாக மடையை சரிசெய்து கண்மாயை தூர்வாரி சீரமைக்க கோரி பலமுறை மனு கொடுத்தும் யூனியன் கண்மாய் என்பதால் யூனியனில் நிதி இல்லை என்று கூறி வருகின்றனர். மடை கட்டுவதற்கு நெடுஞ்சாலைதுறையிடம் அனுமதி வேண்டும் என்று தெரிவித்தனர்.

அந்த அனுமதியையும் வாங்கி கொடுத்துள்ளோம். ஆனால் தற்போது வரை நிதி இல்லை என்ற காரணத்தையே பல ஆண்டுகளாக தெரிவித்து வருகின்றனர். நல்ல மழை பெய்தும், தண்ணீர் சேர்ந்தும் விவசாயம் பார்க்க முடியாத நிலையில் உள்ளோம்.

இனியும் எங்களின் கண்மாயை சரிசெய்து மடையை சீரமைத்து தராவிட்டால் அங்கு வாழ்வதில் பயனில்லை என்பதால் எங்களின் ஆதார் கார்டு, ரேஷன்கார்டு என அனைத்தையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டு ஊரைவிட்டு வெளியேற ஒட்டுமொத்த மக்களும் முடிவு செய்துள்ளோம். எங்களின் நிலையை உணர்ந்து இந்த பணிகளை செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

Next Story