புதுக்கோட்டை மாவட்டத்தில் டாக்டர் உள்பட மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று


புதுக்கோட்டை மாவட்டத்தில் டாக்டர் உள்பட மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 11 July 2020 3:18 AM GMT (Updated: 11 July 2020 3:18 AM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாக்டர் உள்பட மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், நேற்று பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தது. நேற்று மட்டும் 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 280 பேர் சிகிச்சையில் உள்ளனர். 246 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 40 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை இதுவரை 8 ஆக உள்ளது.

அன்னவாசல் அருகே காவேரிநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காவேரிநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டு, வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அறந்தாங்கி பஸ் நிறுத்தம் பின்புறம் உள்ள ஒரு மளிகை கடையில் இருந்த ஒருவர் ஏற்கனவே கொரோனால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று அந்த மளிகை கடையில் வேலை பார்த்த மேலும் 2 பேருக்கும், வீரமாகாளியம்மன் கோவில் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 2 பேருக்கும் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த 36 வயது வாலிபர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் வாங்குவதற்காக திருச்சி சென்று திரும்பிய அவருக்கு, பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய வீட்டில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கறம்பக்குடியில் நேற்று முன்தினம் கச்சேரி வீதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருடைய மனைவி, மகள், பேரக்குழந்தை ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் மழையூர் ஆரம்ப சகாதார நிலைய நர்சுக்கு தொற்று இருந்த நிலையில், நேற்று அவருடைய 8 வயது மகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று பரவியதால் கறம்பக்குடி பேரூராட்சி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Next Story