நம்பியூர் அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் அதிரடி திருப்பம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம்


நம்பியூர் அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் அதிரடி திருப்பம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம்
x
தினத்தந்தி 11 July 2020 11:45 PM GMT (Updated: 11 July 2020 11:36 PM GMT)

நம்பியூர் அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் அதிரடி திருப்பமாக கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலமாகியுள்ளது.

நம்பியூர்,

நம்பியூர் அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் அதிரடி திருப்பமாக கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலமாகியுள்ளது.

ஆட்டோ டிரைவர்

நம்பியூர் அருகே உள்ள கோட்டுபுள்ளாம்பாளையத்தை சேர்ந்தவர் குமார் என்கிற குழந்தைவேல் (வயது 30). ஆட்டோ டிரைவர். நம்பியூர் அருகே உள்ள குருமந்தூரில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். இவருடைய மனைவி இந்துமதி (24). இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி அன்று குமார் திடீரென மாயமானார். இந்துமதி, வெளியில் சென்ற தன் கணவர் திரும்பவீட்டுக்கு வரவில்லை என்று குமாரின் தந்தை பழனிசாமி மற்றும் தம்பி மகேஷ் ஆகியோரிடம் செல்போனில் தகவல் தெரிவித்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் கூறினார். அனைவரும் குமாரை தேடி வந்தார்கள்.

கள்ளத்தொடர்பு

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை கோட்டுப்புள்ளாம்பாளையம் ஏரிக்கரையில் ஒரு சாக்குமூட்டையில் கட்டப்பட்டு காயங்களுடன் குமார் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் நம்பியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசாரின் விசாரணையில் கொலை தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குமாரின் மனைவி இந்துமதிக்கும், கோபி வடுகபாளையத்தை சேர்ந்த ஸ்ரீதர் (28) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது.

தீவிர விசாரணை

உடனே போலீசார் இந்துமதியிடம் விசாரணை நடத்தினார்கள். அழுது புலம்பிய அவர் முன்னுக்கு பின் முரணாகவே பதில் கூறினார். இதனால் ஸ்ரீதரிடம் விசாரணை நடத்தலாம் என்று போலீசார் சென்றார்கள். அதற்குள் ஸ்ரீதரும், இந்துமதியும் மாயமாகிவிட்டார்கள். இதைத்தொடர்ந்து இருவரையும் போலீசார் வலைவீசி தேடிவந்தார்கள்.

இந்தநிலையில் நேற்று கெட்டிச்செவியூர்-குன்னத்தூர் ரோட்டில் ஸ்கூட்டியில் தப்பிச்சென்ற ஸ்ரீதரையும், இந்துமதியையும் போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்கள்.

வாக்குமூலம்

போலீசில் இந்துமதி அளித்த வாக்குமூலம் வருமாறு:-

“கோபியில் உள்ள அட்டை கம்பெனியில் வேலை பார்த்தபோது எனக்கும், குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். பின்னர் பச்சைமலையில் ஒரு வீடு எடுத்து வசித்து வந்தோம். வீடு அருகில் ஒரு லேத் பட்டறை உள்ளது. அங்கு ஸ்ரீதர் அடிக்கடி வந்து சென்றார். அப்போது எனக்கும், ஸ்ரீதருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதுஎன் கணவருக்கு தெரிந்ததால் என்னை கண்டித்தார். பின்னர் நாங்கள் கோட்டுப்புள்ளாம்பாளையத்துக்கு குடி வந்தோம்.

தலையணையால் அமுத்தினேன்

ஆனாலும் எனக்கும், ஸ்ரீதருக்கும் பழக்கம் தொடர்ந்தது. இதனால் இருவரையும் கடுமையாக என் கணவர் கண்டித்தார். நாங்கள் உல்லாசமாக இருக்க தடையாக இருந்தார். அதனால் நானும், ஸ்ரீதரும் சேர்ந்து குமாரை கொல்ல முடிவு செய்தோம்.

அதன்படி கடந்த 9-ந் தேதி உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் குமார் படுத்திருந்தார். அதற்கு முன்னதாகவே ஸ்ரீதர் வீட்டில் வந்து ஒழிந்திருந்தார். படுத்திருந்த குமாரின் முகத்தில் தலையணையால் நான் அமுத்தினேன், ஸ்ரீதர் ஓடிவந்து மரக்கட்டையால் என்கணவரை தாக்கினார். இதில் அவர் இறந்துவிட்டார்.

ஏரிக்கரையில் போட்டோம்

பின்னர் உடலை ஒரு சாக்குமூட்டையில் கட்டி வீட்டில் வைத்துவிட்டோம். அன்று நள்ளிரவு ஸ்கூட்டியில் பிணம் இருந்த சாக்குமூட்டையை வைத்து கொண்டுசென்று ஏரிக்கரையில் போட்டுவிட்டு வந்துவிட்டோம்”. இவ்வாறு அவர் அந்த வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீதரையும், இந்துமதியையும் கைது செய்த போலீசார் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்.

கைது செய்யப்பட்ட ஸ்ரீதரும் காதல் திருமணம் செய்துகொண்டவர். அவருக்கு மனைவியும், இரட்டை குழந்தைகளும் உள்ளனர்.

கட்டிய கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story