நாகூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது


நாகூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 July 2020 12:09 AM GMT (Updated: 12 July 2020 12:09 AM GMT)

நாகூர் அருகே வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குத்திக்கொலை செய்யப்பட்டார். அவர் பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்டப்பட்டது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகூர்,

நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள மேலவாஞ்சூர் காமகோடி நகரை சேர்ந்த பதுருதீன் மகன் அசாருதீன்(வயது 19). இவர், கேரளாவில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் பனங்குடி அரிசி சேமிப்பு கிடங்கின் பின்புறம் உள்ள கருவேல மரக்காட்டில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்று அசாருதீன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் அசாருதீனை கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரெத்தினம் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த மாதம்(ஜூன்) நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக அசாருதீனை சிலர் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.

இதுதொடர்பாக மேலவாஞ்சூர் சமத்துவபுரம் செண்பக தெருவை சேர்ந்த வடிவேல் மகன் விஜயகுமார்(33), பனங்குடி சன்னமங்கலம் காலனி தெருவை சேர்ந்த சண்முகம் மகன் அஜித்குமார்(23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் நடந்த விசாரணையில் தெரியவந்த விவரங்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

நாகூரை அடுத்த நரிமணம் விசாலாட்சியம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்(42). இவர் மேலவாஞ்சூர் கிழக்கு கடற்கரை சாலையில் பஞ்சர் கடை நடத்தி வந்தார். இவர் கடந்த மாதம் 23-ந் தேதி மோட்டார் சைக்கிளில் முட்டம் சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களை கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளை வழிமறித்து செந்திலை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த மேலவாஞ்சூரை சேர்ந்த அகஸ்தியர்(55), அவருடைய மகன் கலியபெருமாள்(25), செல்வம்(40), பனங்குடியை சேர்ந்த மணிகண்டன்(22) ஆகிய 4 பேர் கடந்த மாதம் 24-ந் தேதி தஞ்சை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

செந்தில் படுகொலை செய்யப்பட்டதற்கு அகஸ்தியர் மற்றும் அவருடைய மகனை பழிக்குப்பழி வாங்க வேண்டும் என செந்திலின் நண்பர்கள் திட்டம் தீட்டி வந்தனர். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி இரவு பனங்குடி அரிசி சேமிப்பு கிடங்கின் பின்புற பகுதியில் உள்ள கருவேல மரக்காடு பகுதிக்கு அசாருதீன் வந்தார். இவர், அகஸ்தியர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தவர்.

இவருக்கும் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த செந்திலின் நண்பர்கள் விஜயகுமார், அஜித்குமார் உள்ளிட்டோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விஜயகுமார், அஜித்குமார் உள்ளிட்டோர் அசாருதீனிடம், ‘நீ தான் செந்திலை கொலை செய்ய திட்டம் வகுத்து கொடுத்தாயா? என கேட்டு கத்தியால் அசாருதீனின் நெஞ்சு மற்றும் வயிறு பகுதியில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அசாருதீன் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்து இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story