கோஷ்டி மோதல்; 2 பேர் கைது


கோஷ்டி மோதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 July 2020 1:52 AM GMT (Updated: 13 July 2020 1:52 AM GMT)

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் அபிஷ்டவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ரவிச்சந்திரன்(வயது53) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

வேதாரண்யம்,

 கொரோனா ஊரடங்கு காரணமாக இக்கோவிலில் பூஜை மட்டும் நடைபெற்று வருகிறது. கடந்த 10-ந்தேதி இரவு கோவில் கோபுரவாசலுக்கு வெளியே சிலர் மது அருந்தி கொண்டிருந்தனர். இதை பார்த்த ரவிச்சந்திரன் அவர்களை தட்டி கேட்டார். அப்போது ரவிச்சந்திரனை அவர்கள் தாக்கினர்.

தகவல் அறிந்த ரவிச்சந்திரனின் மகன் ராஜசேகர்(23) சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை தட்டி கேட்டார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜசேகர், விஜயனை தாக்கினார். இதில் அவர் காயம் அடைந்தார். இதுகுறித்து ரவிச்சந்திரன், விஜயன் ஆகியோர் தனி தனியாக வேதாரண்யம் போலிசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தோப்புத்துறைக்கு சென்று கொண்டிருந்த ராஜசேகரை முன்விரோதம் காரணமாக விஜயன் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் தோப்புத்துறையை சேர்ந்த சிவகணேஷ், வேதாரண்யத்தை சேர்ந்த விஜயன், அரவிந்த், மனோஜ், பாலாஜி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அரவிந்த்(31), பாலாஜி(29) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Next Story