கொள்முதலுக்கான டோக்கன் வழங்கக்கோரி பாபநாசத்தில், பருத்தி விவசாயிகள் சாலை மறியல்


கொள்முதலுக்கான டோக்கன் வழங்கக்கோரி பாபநாசத்தில், பருத்தி விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 July 2020 1:12 AM GMT (Updated: 14 July 2020 1:12 AM GMT)

கொள்முதலுக்கான டோக்கன் வழங்கக்கோரி பாபநாசத்தில் பருத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி விவசாயிகளிடம் இருந்து பருத்தியை கொள்முதல் செய்வதற்கு முன்கூட்டியே டோக்கன் வழங்கும் நடைமுறை உள்ளது.

இந்த டோக்கனை பெறுவதற்காக பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வாரந்தோறும் விற்பனை கூடத்தில் அலை மோதுகிறார்கள். இதில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் காரணமாக மீதம் உள்ளவர்கள் டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். இந்த நிலையில் அனைத்து விவசாயிகளுக்கும் பருத்தி கொள்முதலுக்கான டோக்கன் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாபநாசத்தில் பருத்தி விவசாயிகள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துர்கா, விற்பனை கூட கண்காணிப்பாளர் தாட்சாயிணி உள்ளிட்டோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனைவருக்கும் முறைப்படி டோக்கன் வழங்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

இதையடுத்து அனைத்து விவசாயிகளுக்கும் டோக்கன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story