கும்பகோணம் பள்ளி தீ விபத்து 16-ம் ஆண்டு நினைவு தினம்: பலியான 94 குழந்தைகளுக்கு பெற்றோர்-பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி


கும்பகோணம் பள்ளி தீ விபத்து 16-ம் ஆண்டு நினைவு தினம்: பலியான 94 குழந்தைகளுக்கு பெற்றோர்-பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
x
தினத்தந்தி 17 July 2020 3:35 AM GMT (Updated: 17 July 2020 3:35 AM GMT)

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளின் 16-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் பலியான குழந்தைகளின் பெற்றோர்-பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். போலீசார் அனுமதி மறுத்ததால் பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த பள்ளியில் படித்த 94 குழந்தைகள் தீயில் கருகி பலியானார்கள். மேலும் 18 குழந்தைகள் காயம் அடைந்தனர்.

இதையடுத்து பலியான குழந்தைகளின் நினைவு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நேற்று 16-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முன்னதாக குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் படங்கள் முன்பாக குழந்தைகளுக்கு பிடித்த திண்பண்டங்களை வைத்து அகல்தீபம், மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

அதனை தொடர்ந்து தீ விபத்து நடந்த காசிராமன் தெருவில் உள்ள பள்ளி முன்பு வைக்கப்பட்டுள்ள இறந்த 94 குழந்தைகளின் படங்களுக்கு பெற்றோர்கள் மற்றும் தீ விபத்தில் காயம் அடைந்தவர்கள் மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் இறந்த குழந்தைகளின் நினைவாக பாலக்கரையில் கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் பெற்றோர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து ராமலிங்கம் எம்.பி., அன்பழகன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராம.ராமநாதன், சோழபுரம் அறிவழகன், பா.ம.க. முன்னாள் மாநில துணை தலைவர் ம.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை பாண்டியன் மற்றும் பல்வேறு கட்சியினர் பள்ளி முன்பு வைக்கப்பட்டிருந்த இறந்த குழந்தைகளின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

போலீசார் அனுமதி மறுப்பு

கும்பகோணத்தில் கொரோனா தொற்றால் 300-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கும்பகோணம் காசிராமன் தெரு அருகே உள்ள டபீர்குளம் தெருவில் 5-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதால் பள்ளி அமைந்துள்ள பகுதியில் காலை முதல் மாலை வரை குழந்தைகளின் நினைவு தின அனுசரிப்பு நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

அஞ்சலி செலுத்த வருபவர்கள் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து வந்து அஞ்சலி செலுத்திவிட்டு உடனடியாக அங்கிருந்து சென்றுவிட வேண்டும் என போலீசார் கூறினர். இதனால் குழந்தைகளின் பெற்றோர் கூட்டம் கூடாமல் அவ்வப்போது வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர்.

நிகழ்ச்சிகள் ரத்து

வழக்கம்போல் பள்ளியில் இருந்து பாலக்கரையில் உள்ள நினைவு தூணில் பெற்றோர்கள் ஊர்வலமாக வரும் நிகழ்ச்சிக்கும், மகாமக குளத்தில் இறந்த குழந்தைகளுக்காக மோட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சிக்கும் போலீசார் அனுமதி மறுத்ததால் அந்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

Next Story