விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 86.98 சதவீதம் தேர்ச்சி


விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 86.98 சதவீதம் தேர்ச்சி
x
தினத்தந்தி 17 July 2020 5:19 AM GMT (Updated: 17 July 2020 5:19 AM GMT)

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 86.98 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 1.13 சதவீதம் கூடுதலான தேர்ச்சியாகும்.

கள்ளக்குறிச்சி,

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 150 தேர்வு மையங்களில் பிளஸ்-2 தேர்வு நடந்தது.

இந்த தேர்வை திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் இருந்து 5,845 மாணவ- மாணவிகளும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் இருந்து 7,234 மாணவ- மாணவிகளும், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் இருந்து 8,654 பேரும், செஞ்சி கல்வி மாவட்டத்தில் இருந்து 3,653 பேரும், திருக்கோவிலூர் கல்வி மாவட்டத்தில் இருந்து 6,215 பேரும், உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்தில் இருந்து 5,644 பேரும் எழுதினர்.

86.98 சதவீதம் தேர்ச்சி

இவர்களில் திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 5,076 மாணவ- மாணவிகளும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 6,370 மாணவ- மாணவிகளும், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 7,675 பேரும், செஞ்சி கல்வி மாவட்டத்தில் 3,179 பேரும், திருக்கோவிலூர் கல்வி மாவட்டத்தில் 5,079 பேரும், உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்தில் 5,018 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

ஆக மொத்தம் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 17,601 மாணவர்களும், 19,644 மாணவிகளும் என 37,245 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதில் 14,670 மாணவர்களும், 17,727 மாணவிகளும் என 32,397 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 86.98 ஆகும்.

கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல்

இதன் மூலம் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதமான 85.85 சதவீதத்தை விட இந்த ஆண்டு 1.13 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் பெரிய அளவில் உயராவிட்டாலும் சராசரியாக 1 முதல் 4 சதவீதம் வரை உயர்ந்து கொண்டு வருகிறது. தற்போது கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 1.13 சதவீதம் அதிகரித்துள்ளது கல்வித்துறை அதிகாரிகளிடையே சற்று திருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story