ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி கோவில்கள் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள்


ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி கோவில்கள் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள்
x
தினத்தந்தி 18 July 2020 1:16 AM GMT (Updated: 18 July 2020 1:16 AM GMT)

ஆடி மாதம் என்றாலே, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள்.

திண்டுக்கல்,

ஆடி மாதம் என்றாலே, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இதனால் திண்டுக்கல் நகரில் இருக்கும் அனைத்து அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், ஊரடங்கால் கோவில்கள் திறக்காத நிலையிலும், மக்கள் வழிபாட்டை தொடர்ந்தனர். ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி ஏராளமான பெண்கள் விரதம் மேற்கொண்டனர்.

இதையடுத்து பூட்டி இருக்கும் கோவில்களின் நுழைவுவாயில் முன்பு நின்று மக்கள் மனமுருக வழிபாடு செய்தனர். ஒருசில பக்தர்கள் கற்பூரம் ஏற்றியும், நெய்விளக்கு ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபாடு செய்தனர்.

இதேபோல் பட்டிவீரன்பட்டியில் உள்ள சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவிலில் ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சுயம்பு நாகேஸ்வரியம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இந்த அலங்காரத்தை, வாட்ஸ்-அப் மூலம் பக்தர்கள் கண்டுகளித்தனர். நத்தம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் வெள்ளிக்கவச அலங்காரத்தில் மாரியம்மன் அருள்பாலித்தார். ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.

Next Story