மேட்டுப்பாளையத்தில் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா ரத்து


மேட்டுப்பாளையத்தில் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா ரத்து
x
தினத்தந்தி 18 July 2020 3:40 AM GMT (Updated: 18 July 2020 3:40 AM GMT)

கொரோனா ஊரடங்கு காரணமாக மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பவானி ஆற்றின் கரையோர பகுதியில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசை, பிரதோஷ பூஜை மற்றும் திங்கள், செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறும். இதில், ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள்.

இந்த கோவில் ஆடி குண்டம் திருவிழா, ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு நாட்களில் பக்தர்கள் குவிந்து வழிபாடு செய்வார்கள். ஆடி குண்டம் திருவிழாவையொட்டி 15 நாட்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை, கொடியேற்றம், குண்டம் இறங்குதல், திருவிளக்கு பூஜை மற்றும் தினசரி ரதத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறும்.

ஆடிக்குண்டம் திருவிழா ரத்து

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்து உள்ளன. அதன்படி, கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் அடைக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் வரும் 3 வழிகளும் மூடப்பட்டு உள்ளன.

இதற்கிடையே வனபத்ரகாளியம்மன் கோவிலில் இந்த ஆண்டு நடைபெறும் 29-வது ஆடிக்குண்டம் திருவிழா மற்றும் அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெல்லித்துறைக்கு செல்லும் சாலையில் உள்ள கோவில் அலங்கார வளைவு கேட்டில் மாலை அணிவித்தும் தேங்காய் உடைத்து கற்பூர தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு செல்கின்றனர். பெண்கள் எலுமிச்சை தீபமேற்றி வழிபடுகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் திறக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 

Next Story