தொழில்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப ஈரோட்டில் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.350 கோடி கடன் வழங்க ஒப்புதல் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


தொழில்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப ஈரோட்டில் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.350 கோடி கடன் வழங்க ஒப்புதல் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 18 July 2020 3:44 AM GMT (Updated: 18 July 2020 3:44 AM GMT)

ஈரோடு மாவட்டத்தில் தொழில்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப தொழில் நிறுவனங்களுக்கு ரூ.350 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. அங்குள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இது ஒரு சோதனையான நேரம். இன்று உலகையே அதிர வைக்கின்ற கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் ஈரோடு மாவட்டத்தில் இந்த நோய்ப் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான நடவடிக்கையினாலும், ஈரோடு மாவட்ட மக்கள் இந்த நோய்ப் பரவலைத் தடுக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருந்ததாலும், இந்த வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருப்பதால் நம் வாழ்க்கைக்கே இதனால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய நோய். இந்த 4 மாத காலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்தபோது, ஏற்கனவே ஏதாவதொரு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உடனடியாக கொரோனா சிகிச்சை பெறாமல் இருப்பதினால்தான் உயிரிழப்பு ஏற்படுகிறது.

எனவே, ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை மேற்கொண்டு வருபவர்கள், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிற்கான அறிகுறி தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக்கொண்டால் உயிர் பிழைத்துக் கொள்ளலாம். இதுவரை 67 சதவீத நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 1.56 லட்சம் நபர்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். நாம் பரிசோதனையை அதிகமாக மேற்கொண்டு உரிய சிகிச்சை அளித்த காரணத்தினால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது, சுமார் 2,250 நபர்கள் இறந்துள்ளனர். மராட்டியத்தில் சுமார் 11 ஆயிரம் நபர்கள் இறந்திருக்கிறார்கள்.

இந்தக் காலகட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு ஒரு பெரிய சோதனை, மிகப்பெரிய சவாலாக உள்ளது. தொழில் மீண்டும் துவங்க வேண்டும், இயல்பு நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக மத்திய அரசாங்கம் பல்வேறு சலுகைகளை அளித்திருக்கின்றது. ஈரோடு மாவட்டத்தில் 8,329 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. இவர்களுக்காக சுமார் ரூ.350 கோடி கடன் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. தொழில் நிறுவனங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு வருவதற்கு இந்த கடனுதவிகள் பேருதவியாக இருக்கும்.

இங்கே பல்வேறு கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள். அரசாங்கம் நிதிச் சுமையில் இருந்து கொண்டிருக்கிறது. ஈரோடு மாவட்டத்தின் முதன்மை தொழில்களான வேளாண்மை மற்றும் ஜவுளித் தொழில்கள் இரண்டிற்கும் முழு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நீங்கள் வைத்த கோரிக்கையை அரசு கனிவோடு பரிசீலித்து, வேண்டிய அளவிற்கு தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்கு அரசு துணை நிற்கும்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தொழிலதிபர்கள் அரிய பல கருத்துக்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். அரசு உங்களது கருத்துக்களை எடுத்துக்கொண்டு அதற்குண்டான முயற்சியை எடுக்குமென்று தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story