எனது அரசை கவிழ்க்க செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டாம் பா.ஜனதா மீது உத்தவ் தாக்கரே சாடல்


எனது அரசை கவிழ்க்க செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டாம் பா.ஜனதா மீது உத்தவ் தாக்கரே சாடல்
x
தினத்தந்தி 26 July 2020 8:56 PM GMT (Updated: 26 July 2020 8:56 PM GMT)

சிலர் அழிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றும், தனது தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசை கவிழ்க்க செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டாம் என்றும் பா.ஜனதா மீது உத்தவ் தாக்கரே சாடி உள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் நேர்மறையானவை. 3 கட்சிகளின் அனுபவத்தில் இந்த அரசு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

எனது தலைமையிலான அரசாங்கத்தின் எதிர்காலம் எதிர்க்கட்சிகளின் கைகளில் இல்லை. இந்த கூட்டணி அரசு முச்சக்கர வண்டி(ஆட்டோ). இது ஏழைகளுக்கான வாகனம். அதன் ஸ்டீயரிங் என் கைகளில் உள்ளது. மற்ற இருவரும் (தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்) பின்னால் அமர்ந்து இருக்கிறார்கள்.

அரசை கவிழ்ப்பது ஜனநாயகமா?

உங்களுக்கு (எதிர்க்கட்சியான பா.ஜனதா) இந்த அரசை கவிழ்ப்பதில் இன்பம் கிடைத்தால் இப்போதே கவிழ்த்து விடுங்கள். ஊகிக்கப்படுவது போல் செப்டம்பர், அக்டோபர் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? சிலர் ஆக்கப்பூர்வமான பணியை செய்வதில் இன்பம் அடைகிறார்கள். ஆனால் சிலர் அழிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

மகா விகாஷ் அகாடி கூட்டணி ஜனநாயக கொள்கைகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டது என்று கூறுகிறீர்கள். ஆனால் அதை நீங்கள் கவிழ்த்தால்அது ஜனநாயகமாகி விடுமா? நான் கொள்கையில் இருந்து பிறழவில்லை. ஒரு கூட்டணியில் தான் சேர்ந்து இருக்கிறேன்.

இந்த கூட்டணி அரசில் காங்கிரஸ் புறக்கணிக்கப்படுவதாக உண்டான பிரச்சினை அக்கட்சி தலைவர்களுடனான சந்திப்புக்கு பின் தீர்க்கப்பட்டது. சரத்பவாருடன் எனக்கு நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது. நான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story