வருகிற 2-ந் தேதியுடன் முடிவடைகிறது ஞாயிறு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்-மந்திரி முடிவு செய்வார் மந்திரி ஆர்.அசோக் பேட்டி


வருகிற 2-ந் தேதியுடன் முடிவடைகிறது ஞாயிறு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்-மந்திரி முடிவு செய்வார் மந்திரி ஆர்.அசோக் பேட்டி
x
தினத்தந்தி 26 July 2020 9:22 PM GMT (Updated: 26 July 2020 9:22 PM GMT)

வருகிற 2-ந் தேதி முடிவடைய உள்ள நிலையில் மேலும் 3 வாரங்களுக்கு ஞாயிறு முழு ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்வார் என்று மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளாார்.

பெங்களூரு,

கேரளா மற்றும் மராட்டிய மாநிலங்களில் இருந்து அணைகளில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டால் கர்நாடகத்தில் சிக்கல் ஏற்படும். அதனால் அந்த மாநில அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும்படி சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். மராட்டிய மாநிலம் கொய்னா அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அடிக்கடி வெள்ள பாதிப்பில் சிக்கும் 1,980 கிராமங்களை அடையாளம் கண்டு, அங்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்துள்ளோம்.

வெள்ளத்தின்போது மீட்கப்படுபவர்களை தங்க வைக்க 1,740 நிவாரண முகாம்களை அமைத்துள்ளோம். மாவட்ட கலெக்டர்களின் வங்கி கணக்கில் ரூ.1,144 கோடி நிதி இருப்பு உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் 15 நாட்களுக்கு ஒரு முறை ஆலோசனை கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும், தீயணைப்பு துறையினர் செயல் விளக்க நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.

முதல்-மந்திரி முடிவு செய்வார்

கடந்த ஆண்டு குடகில் நிலச்சரிவு ஏற்பட்டால் அதிகம் பேர் உயிரிழந்தனர். அதனால் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்பு உள்ள பகுதிகளை ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பெங்களூரு நகருக்கு வெளியே தாசனபுரா, உத்தரஹள்ளி, ஜிகினி, சர்ஜாப்புரா, தொட்டஜால, மாரேனஹள்ளி ஆகிய பகுதிகளில் மயானம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மயானங்களில் மத வேறுபாடு இன்றி அனைவரின் உடல்களும் ஒரே பகுதியில் அடக்கம் செய்யப்படும்.

நான் வருவாய்த்துறை மந்திரியாக பதவி ஏற்ற பிறகு மக்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றி 65 நிறுவனங்களின் ரூ.137 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு கடந்த 5-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது வருகிற 2-ந் தேதி நிறைவடைகிறது. இந்த நிலையில் மேலும் 3 வாரங்களுக்கு ஞாயிறு முழு ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பாவே முடிவு செய்வார்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

Next Story