கொரோனாவுக்கு எப்போது மருந்து கண்டுபிடிப்பார்கள் என தெரியவில்லை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி


கொரோனாவுக்கு எப்போது மருந்து கண்டுபிடிப்பார்கள் என தெரியவில்லை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 28 July 2020 9:23 PM GMT (Updated: 28 July 2020 9:23 PM GMT)

கொரோனா தடுப்பு மருந்தை எப்போது கண்டுபிடிப்பார்கள் என தெரியவில்லை. அதுவரை பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலன் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருப்பது வருத்தமளிக்கிறது. அவருடைய இறப்பு பாலனின் குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் பெரிய இழப்பாகும். மாநிலத்தில் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் சுகாதாரத்துறையின் வேலைப்பளு அதிகரித்துள்ளது. எனவே தேவைக்கேற்ப டாக்டர்கள், செவிலியர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். வெகுவிரைவில் டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள். தேவையான உபகரணங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் பரிசோதனை முடிவு வர 2 நாட்கள் காத்திருக்க வேண்டியது உள்ளது. எனவே பரிசோதனை முடிவுகளை உடனே தெரிந்து கொள்ளும் வகையில் உபகரணங்கள் ஒரு வாரத்துக்குள் வாங்கப்பட்டு பரிசோதனைகள் தொடங்கப்படும்.

10 ஆயிரம் படுக்கைகள்

புதுவை ஜிப்மரில் 1000 பேருக்கும், இந்திராகாந்தி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 250 பேருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. இது உயர்த்தப்படும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் குறைந்த எண்ணிக்கையில் பரிசோதனை செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியும் சுமார் 200 பேர் அளவுக்கு பரிசோதனை செய்யும் மையத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி புதுவையில் உள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் தினமும் 1,500 முதல் 2,500 வரை பரிசோதனை மேற்கொள்ள முடியும். அதற்கு தேவையான படுக்கைகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்தமாக சுமார் 10 ஆயிரம் படுக்கைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தடுப்பு மருந்து எப்போது?

தனியார் ஓட்டல்களிலும் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பரிசோதனை முடிவுகள் 30 நிமிடத்தில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து 50-க்கும் மேற்பட்ட வெண்டிலேட்டர்கள் வந்துள்ளன. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது மட்டும் போதாது. மக்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது. அரசின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். சமூக இடைவெளி அவசியம். சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்ப்பதுடன் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்து இருந்தால் தான் கொரோனாவை விரட்ட முடியும். தடுப்பு மருந்து எப்போது கண்டுபிடிப்பார்கள் என்பது தெரியவில்லை. அதுவரை விழிப்புடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story