நண்பர்களுடன் சூதாட்டம் சென்னையில், நடிகர் ஷாம் கைது ‘ஊரடங்கால் பொழுதுபோகவில்லை’ என்று வாக்குமூலம்


நண்பர்களுடன் சூதாட்டம் சென்னையில், நடிகர் ஷாம் கைது ‘ஊரடங்கால் பொழுதுபோகவில்லை’ என்று வாக்குமூலம்
x
தினத்தந்தி 28 July 2020 10:17 PM GMT (Updated: 28 July 2020 10:17 PM GMT)

நண்பர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னையில் நடிகர் ஷாம் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

‘12-பி’, ‘இயற்கை’, ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ உள்பட ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் ஷாம். தற்போது இவர் ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றி வருகிறார்.

இவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இவருக்கு சொந்தமாக ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டில் சூதாட்ட கிளப் செயல்படுவதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து துணை கமிஷனர் தர்மராஜன் மேற்பார்வையில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி மேற்பார்வையில் போலீஸ் படையினர் நேற்றுமுன்தினம் இரவு, நடிகர் ஷாம் வீட்டில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.

கைது- ஜாமீன்

அப்போது அங்கு நடிகர் ஷாம் தனது நண்பர்கள் 12 பேருடன் சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். சூதாட்டத்துக்கு பணத்தை நேரடியாக பயன்படுத்தாமல் ‘டோக்கன்’ பயன்படுத்தப்பட்டது. போலீசார் நடிகர் ஷாம் உள்பட 13 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டுகளும், பணத்துக்கு பதிலாக பயன்படுத்திய ‘டோக்கன்’களும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரிடம் நடிகர் ஷாம் கூறும்போது, ‘ கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், பொழுதுபோக்கிற்காக வெளியே போக முடியவில்லை. இதனால் தனது வீட்டில் நண்பர்களோடு சீட்டு விளையாடினேன் என்றும், அதை தொழிலாக செய்யவில்லை என்றும்’ வாக்குமூலம் அளித்தார்.

எனினும் நடிகர் ஷாம் மற்றும் அவரது நண்பர்கள் 12 பேரும் நுங்கம்பாக்கம் போலீஸ்நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் நடிகர் ஷாம் உள்பட அனைவரையும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

நடிகர்-நடிகைகள் தப்பி ஓட்டமா?

மேலும் 3 முக்கிய நடிகர்களும், சில நடிகைகளும் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் நுங்கம்பாக்கம் போலீசார் அதனை மறுத்தனர். நடிகர் ஷாம் உள்ளிட்ட 13 பேர் மட்டுமே சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story