மராட்டியத்தில் எஸ்.எஸ்.சி. தேர்வு முடிவு வெளியானது 95.30 சதவீத மாணவர்கள் தேர்ச்சி கடந்த ஆண்டை விட தேர்ச்சி அதிகரிப்பு


மராட்டியத்தில் எஸ்.எஸ்.சி. தேர்வு முடிவு வெளியானது 95.30 சதவீத மாணவர்கள் தேர்ச்சி கடந்த ஆண்டை விட தேர்ச்சி அதிகரிப்பு
x
தினத்தந்தி 29 July 2020 9:44 PM GMT (Updated: 29 July 2020 9:44 PM GMT)

மராட்டியத்தில் எஸ்.எஸ்.சி. தேர்வு முடிவு வெளியானது. 95.30 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 18.2 சதவீதம் அதிகரித்து உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் எஸ்.எஸ்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 40 ஆயிரத்து 612 மாணவர்களும், 7 லட்சத்து 34 ஆயிரத்து 491 மாணவிகளும் என மொத்தம் 15 லட்சத்து 75 ஆயிரத்து 103 பேர் எழுதி இருந்தனர்.

கொரோனா பிரச்சினை காரணமாக புவியியல் பாடத்தேர்வு மட்டும் நடைபெறவில்லை. எனவே மாணவர்கள் மற்ற பாடங்களில் பெறும் மதிப்பெண்களின் சராசரி புவியியல் பாடத்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே கொரோனா பிரச்சினை காரணமாக தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் தேர்வு எழுதிய மாணவர்கள் எப்போது தேர்வு முடிவு வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்தநிலையில், நேற்று மதியம் 1 மணிக்கு தேர்வு முடிவு வெளியானது. இதில், தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் 15 லட்சத்து 1,105 பேர் தேர்ச்சி அடைந்தனர்.

95.30 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

தேர்ச்சி பெற்றவர்களில் 7 லட்சத்து 89 ஆயிரத்து 309 பேர் மாணவர்கள். 7 லட்சத்து 11 ஆயிரத்து 796 பேர் மாணவிகள். மாணவர்கள் 93.90 சதவீதமும், மாணவிகள் 96.91 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 95.30 சதவீதம் ஆகும்.

கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 77.10 சதவீதம் மாணவர்களே தேர்ச்சி பெற்று இருந்தனர். இந்தநிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 18.2 சதவீதம் அதிகரித்து உள்ளது.

கொங்கன் மண்டலத்தில் அதிகபட்சமாக 98.77 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

மும்பை மண்டலத்தில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 136 பேர் தேர்வை எழுதி இருந்தனர். இவர்களில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 284 பேர் தேர்ச்சி பெற்றனர். மும்பை மண்டலத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96.72 சதவீதம் ஆகும். மற்ற மண்டலங்களில் மாணவர்கள் பெற்ற தேர்ச்சி சதவீத விவரம் வருமாறு:-

புனே 97.34, நாக்பூர் 93.84, அவுரங்காபாத் 92, கோலாப்பூர் 97.64, அமராவதி 95.14, நாசிக் 93.73, லாத்தூர் 93.09 சதவீதம் ஆகும்.

சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்

இதேபோல தேர்வு எழுதியவர்களில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 853 மாணவர்களும், 1 லட்சத்து 63 ஆயிரத்து 179 மாணவிகளும் டிஸ்டிங்சனில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதல் வகுப்பில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 480 மாணவர்களும், 2 லட்சத்து 38 ஆயிரத்து 898 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதேபோல மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 79 ஆயிரத்து 264 தனித்தேர்வர்கள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதி இருந்தனர். இவர்களில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 991 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தனித்தேர்வர்களின் தேர்ச்சி விகிதம் 75.86 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு தனித்தேர்வர்கள் 32.32 சதவீதம் மட்டுமே தேர்ச்சி அடைந்து இருந்தனர்.

10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே வாழ்த்து கூறியுள்ளார். 

Next Story