கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்றவர் கைது


கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 29 July 2020 10:28 PM GMT (Updated: 29 July 2020 10:28 PM GMT)

கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

அரியாங்குப்பம்,

புதுவையில் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறப்பதாகவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து விற்கப்படுவதாகவும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. அரியாங்குப்பம், புதுக்குப்பம், வீராம்பட்டினம், நோணாங்குப்பம், மணவெளி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையொட்டி போலீஸ் உயர்அதிகாரிகள் உத்தரவின்பேரில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் வேல்முருகன், மார்ஸ் அருள்ராஜ், ராஜேஷ் ஆகியோர் கொண்ட தனிப் படையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

வாலிபர் கைது

நேற்று முன்தினம் மணவெளி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் அவர், அரியாங்குப்பம் சுப்பையா நகர் லெனின் வீதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 27) என்பதும், விழுப்புரத்தில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 13 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story