படப்பை அருகே வாலிபர் வெட்டிக்கொலை


படப்பை அருகே வாலிபர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 29 July 2020 11:10 PM GMT (Updated: 29 July 2020 11:10 PM GMT)

படப்பை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த ஆத்தனஞ்சேரி எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் அஜய்பிரசாத் (வயது 22). இவர், சாலமங்கலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று காலை அவர் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

படப்பையை அடுத்த சாலமங்கலம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்மநபர்கள் அஜய் பிரசாத்தை வழி மறித்தனர். அவர்களிடம் கத்தி, அரிவாள் இருப்பதை பார்த்த அஜய் பிரசாத் அங்கிருந்து தப்பி ஓடினார்.

வெட்டிக்கொலை

அவர் அங்கு இருந்த ஓட்டலுக்குள் புகுந்தார். அவரை விடாமல் விரட்டி வந்த மர்மநபர்கள் ஓட்டலுக்குள் புகுந்து அஜய் பிரசாத்தை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அஜய் பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களில் 2 பேர் ஹெல்மெட் அணிந்திருந்தனர். ஒருவர் முகத்தில் கர்சீப் கட்டியிருந்தார்.

இது குறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Story