எந்திரத்தில் சிக்கி பெண்ணின் கை துண்டிப்பு இழப்பீடு வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் ‘திடீர்’ போராட்டம்


எந்திரத்தில் சிக்கி பெண்ணின் கை துண்டிப்பு இழப்பீடு வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் ‘திடீர்’ போராட்டம்
x
தினத்தந்தி 29 July 2020 11:40 PM GMT (Updated: 29 July 2020 11:40 PM GMT)

பாளையங்கோட்டையில் எந்திரத்தில் சிக்கி பெண்ணின் கை துண்டானது. அவரது குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு தூய்மை பணியாளர்கள் நேற்று திடீரென போராட்டம் நடத்தினர்.

நெல்லை,

நெல்லை மேலப்பாளையம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மனைவி பாக்கியலட்சுமி (வயது 35). இவர் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை உரம் தயாரிப்பு மையத்தில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் பாக்கியலட்சுமி, மக்கும் குப்பையை தனியாக பிரிந்து எந்திரத்தில் போட்டு அரைத்து கொண்டு இருந்தார். திடீரென்று அவரது வலது கை, எந்திரத்தில் சிக்கி துண்டானது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் வேலை செய்த ஊழியர்கள் ஓடி வந்தனர். பாக்கியலட்சுமியை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போராட்டம்

இந்த நிலையில் நேற்று காலை பெருமாள்புரம் மாநகராட்சி அலகு அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் திடீரென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், “கையை இழந்து பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் காப்பீடு வழங்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் அரசு பணி வழங்க வேண்டும். பாக்கியலட்சுமியின் குழந்தையை அரசு செலவில் படிக்க வைக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால், தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்” என்றனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Next Story