நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் முதன்முறையாக கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மாதெரபி சிகிச்சை டாக்டர்கள் சாதனை


நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் முதன்முறையாக கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மாதெரபி சிகிச்சை டாக்டர்கள் சாதனை
x
தினத்தந்தி 29 July 2020 11:46 PM GMT (Updated: 29 July 2020 11:46 PM GMT)

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் முதன்முறையாக கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மாதெரபி சிகிச்சை அளித்து டாக்டர்கள் சாதனை படைத்தனர்.

நெல்லை,

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் மக்களை முடக்கிப்போட்டு உள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் கொரோனாவை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு, பரிசோதனைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அதே நேரத்தில் கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிப்பதன் மூலம் எளிதில் குணப்படுத்தும் சிகிச்சையும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் இந்த பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க அனுமதி கிடைத்தது.

பிளாஸ்மா தானம்

அதாவது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களுக்கு இயற்கையாகவே ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். அவர்களது ரத்தத்தை தானமாக பெற்று அதிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பிளாஸ்மா செல்களை தனியாக பிரித்தெடுத்து, அதனை கொரோனா நோயாளிக்கு செலுத்தி குணமடைய செய்வதே பிளாஸ்மா தெரபி சிகிச்சை ஆகும். இந்த சிகிச்சை அளிக்க தேவையான உபகரணங்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியை சேர்ந்த கொரோனாவில் இருந்து குணமடைந்த ஒருவரிடம் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டது. அவருக்கு கொரோனா இருக்கிறதா? என்று கூடுதலாக ஒருமுறை பரிசோதனை செய்து இல்லை என்பதை உறுதி செய்த பிறகே ரத்ததானம் பெறப்பட்டது.

பின்னர் பேராசிரியர்கள் மணிமாலா, ரவிசங்கர் தலைமையில் அந்த ரத்தம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் அதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியுடன் கூடிய பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டது.

முதல் சிகிச்சை

இதையடுத்து நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் முதன்முறையாக நேற்று கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பாதிக்கப்பட்டிருந்த ஒரு நோயாளி தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு இந்த பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த பணியில் டீன் ரவிச்சந்திரன் ஆலோசனையின்படி டாக்டர்கள் சத்யா, ராஜகோபால், லட்சுமி பிரியா, ரோஷினி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நெல்லையில் முதல்முறையாக பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ள மருத்துவ குழுவினருக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர்.

Next Story