பெருங்குடியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மருந்தாக விற்ற 2 பேர் கைது


பெருங்குடியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மருந்தாக விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 July 2020 11:16 PM GMT (Updated: 30 July 2020 11:16 PM GMT)

பெருங்குடியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மருந்ததாக விற்ற மருந்து கடைக்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெருங்குடி பறக்கும் ரெயில் நிலையம் அருகே இளைஞர்களுக்கு போதை மருந்தை விற்றதாக பெருங்குடி கல்லுக்குட்டையை சேர்ந்த தமிழரசன்(வயது 29) என்பவரை பெருங்குடி போலீசார் கைது செய்தனர். இவர் தனது நண்பர் மூலமாக வலி நிவாரணி மாத்திரைகளை ஆந்திராவில் இருந்து ஒட்டுமொத்தமாக வாங்கி வந்து வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மாத்திரையை ரூ. 400 முதல் ரூ.500 வரை விற்று வந்தது தெரிந்தது.

இதையடுத்து தமிழரசனின் நண்பரான வேளச்சேரியை சேர்ந்த சாதிக் பாட்ஷா(30) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். சாதிக் பாட்ஷா, வேளச்சேரி அன்னை இந்திரா நகரில் மருந்து கடை நடத்தி வருகிறார். அவரது வீட்டில் இருந்து சுமார் 2400 வலி நிவாரணி மாத்திரைகள், இருமல் டானிக் 100 பாட்டில்கள் மற்றும் ஊசி போடும் சிரஞ்சி, ரூ.5 லட்சம் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

கொள்ளை லாபம்

சாதிக் பாட்ஷாவிடம் நடத்திய விசாரணையில், கடந்த மாதம் ஊரடங்கின் போதே ஆந்திரா சென்று அங்கிருந்து வலி நிவாரணி மாத்திரைகளை கள்ளச்சந்தையில் வாங்கி வந்து உள்ளார். பின்னர் போதைக் காக இளைஞர்களுக்கு மாத்திரைகளை விற்பனை செய்து வந்தார். அதில் நல்ல லாபம் கிடைத்ததால் தமிழரசனிடம் கொடுத்து விற்று வந்துள்ளார்.

வலி நிவாரணி மாத்திரையை பொடி செய்து அதை திரவ கரைசலாக மாற்றி சிரஞ்சி மூலம் உடலில் செலுத்தினால் 3 முதல் 4 மணி நேரம் போதை உடலில் இருக்கும். அதே போல் இருமல் டானிக் இரண்டு பாட்டில்கள் குடித்தால் ஒரு நாள் முழுவதும் முழு போதை இருப்பதால் ஊரடங்கு காலத்தில் இந்த விற்பனையில் ஈடுபட்டதில் கொள்ளை லாபம் பார்த்துள்ளனர்.

சாதிக் பாட்ஷா மீது ஏற்கனவே சட்டவிரோதமாக மாத்திரை விற்பனை செய்தது தொடர்பாக போதை தடுப்பு பிரிவு போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. கைதான இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story