வண்டலூர் பூங்காவில் சிறுத்தைப்புலி சாவு


வண்டலூர் பூங்காவில் சிறுத்தைப்புலி சாவு
x
தினத்தந்தி 30 July 2020 11:53 PM GMT (Updated: 30 July 2020 11:53 PM GMT)

ஊட்டியில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட சிறுத்தைப்புலி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

வண்டலூர்,

நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவின் பணியாளர்கள் குடியிருப்புக்கு அருகே சாலையோரத்தில் கடந்த மே மாதம் 16-ந் தேதி ஆண் சிறுத்தைப்புலி ஒன்று காலில் காயத்துடன் நடக்க முடியாமல் படுத்து கிடந்தது. இதனை மீட்ட வனத்துறையினர் அங்கு உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று எக்ஸ்ரே பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது அதன் தலை, மூளைப்பகுதியில் பலத்த காயமும் வலது காலில் உள்காயங்களும் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கு உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை ஓரளவு பலன் தந்தாலும் சிறுத்தைப்புலி முழுமையாக குணமடையவில்லை, இதனையடுத்து ஊட்டியில் உள்ள கால்நடை டாக்டர்கள் சிறுத்தைப்புலியை மேல் சிகிச்சைக்காக வண்டலூர் பூங்காவுக்கு கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தது

இதனை தொடர்ந்து வண்டலூர் பூங்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் தனி கூண்டில் வைத்து டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது சிறுத்தைப்புலியின் மனநிலையில் மாறுபாடுகள் இருப்பது தெரிய வந்தது. நரம்பியல் பரிசோதனையில், விலங்கின் பார்வையில் கோளாறு, நடையில் இடையூறுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது. சிறுத்தைப்புலி பூங்காவில் உள்ள விலங்குகள் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு டாக்டர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சையில் இருந்த சிறுத்தைப்புலி கோமா நிலைக்கு சென்றது. இருப்பினும் டாக்டர்கள் தொடந்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறுத்தைப்புலி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.

Next Story