வியாபாரிக்கு கொரோனா: ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு இன்று விடுமுறை


வியாபாரிக்கு கொரோனா:  ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு இன்று விடுமுறை
x
தினத்தந்தி 31 July 2020 1:33 AM GMT (Updated: 31 July 2020 1:33 AM GMT)

வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை விடப்பட்டு உள்ளது.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் என 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. அங்கு வாரந்தோறும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை தினங்கள் தவிர மற்ற நாட்களில் மஞ்சள் விற்பனை நடக்கிறது.

இந்தநிலையில் மஞ்சள் வியாபாரி ஒருவர் வெளியூர் சென்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அனைத்து மஞ்சள் மார்க்கெட்டுகளிலும் கிருமி நாசினி தெளித்தல், சுத்தம் செய்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விடுமுறை

எனவே இன்று (வெள்ளிக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 மார்க்கெட்டுகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) வழக்கமான விடுமுறை ஆகும். ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி (திங்கட்கிழமை) ஆவணி அவிட்டத்தையொட்டி விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே 4 நாட்களுக்கு பிறகு 4-ந் தேதி முதல் வழக்கம்போல் மஞ்சள் ஏலம் நடைபெறும் என்று ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்து உள்ளார்.

Next Story