நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று காட்டில் வீசி சென்ற கணவர் கைது உடந்தையாக இருந்த நண்பரும் சிக்கினார்


நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று காட்டில் வீசி சென்ற கணவர் கைது உடந்தையாக இருந்த நண்பரும் சிக்கினார்
x
தினத்தந்தி 31 July 2020 7:05 PM GMT (Updated: 31 July 2020 7:05 PM GMT)

நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் மனைவியை கொன்று காட்டில் வீசி சென்ற கணவரை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த நண்பரும் போலீசில் சிக்கினார்.

மும்பை,

நவிமும்பை ராபாலேயை சேர்ந்தவர் மகேந்திர திவாரி. இவரது மகன் அம்புஜ்(வயது28) மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நீலம்(28).

கடந்த சில தினங்களுக்கு முன்பு மகன், மருமகள் இருவரும் காணாமல் போய்விட்டதாக மகேந்திர திவாரி ராபாலே போலீசில் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் தேடிவந்தனர்.

இந்தநிலையில் கன்சோலியில் இருந்த அம்புஜை போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் காணாமல் போன நீலம் தொடர்பாக விசாரித்தனர். இதில் நீலம் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

2 பேர் கைது

அதாவது அம்புஜிற்கு மனைவி நீலமின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கன்சோலியை சேர்ந்த நண்பர் ஸ்ரீகாந்த்(24) என்பவரின் உதவியை நாடினார்.

இதையடுத்து 2 பேரும் சேர்ந்து கடந்த 23-ந்தேதி தேதி நீலமை கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை பிளாஸ்டிக் டிரம்பில் போட்டு மறைத்து ஒரு டெம்போவில் ஏற்றி லோனாவாலாவுக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மும்பை-புனே நெடுஞ்சாலை கப்போலி அருகே உள்ள காட்டுப்பகுதியில் உடலை வீசிவிட்டு வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கிடந்த நீலமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அம்புஜையும், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் ஸ்ரீகாந்த்தையும் கைது செய்தனர்.

Next Story