இன்று பக்ரீத் பாண்டிகை: கவர்னர், முதல்-அமைச்சர் வாழ்த்து


இன்று பக்ரீத் பாண்டிகை: கவர்னர், முதல்-அமைச்சர் வாழ்த்து
x
தினத்தந்தி 31 July 2020 11:52 PM GMT (Updated: 31 July 2020 11:52 PM GMT)

பக்ரீக் பண்டிகையை முன்னிட்டு கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி,

பக்ரீத் திருவிழா தியாகத்தின் உணர்வை வலியுறுத்துவதோடு அல்லாமல், தாராளம், அமைதி, இரக்கம் மற்றும் நல்லிணக்கத்தின் கொள்கைகளை பின்பற்றவும் பிரசாரம் செய்யவும் அறிவுறுத்துகிறது. இந்த புனித தருணத்தில், முஸ்லிம் சகோதரர்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேச மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர்

முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

இஸ்லாமியர்களால் தியாகத்திருநாள் என்று போற்றப்படும் பக்ரீத் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய தருணம் இதுவாகும். இறைவனிடம் முழுமையாக நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை உலகிற்கு எடுத்துச் சொன்ன நிகழ்வாக பக்ரீத் பண்டிகை விளங்குகிறது. புத்தாடை அணிந்து தொழுகைகளில் கலந்துகொள்வதோடு அக்கம்பக்கத்தினர், உறவினர் மற்றும் ஏழைகளுக்கு குர்பானி கொடுத்து, ஈகையின் மகத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் திருநாளாக பக்ரீத் திகழ்கிறது. வருடந்தோறும் ரம்ஜான் பண்டிகையின்போது நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி வழங்குவது, புனித ஹஜ் பயணத்துக்கு நிதியுதவி ஆகியவை முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வந்தது. இந்த பட்ஜெட்டில் இவை அரசின் திட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான நிலை விரைந்து சீரடையவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற அசாதாரண சூழ்நிலை ஏற்படாமல் இருக்கவும் இறைவனை பிரார்த்திக்குமாறு இஸ்லாமிய சகோதரர்களை கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் நமச்சிவாயம்

ஈகை பண்பு தான் அனைவரது வாழ்க்கை தரத்தையும், மக்களின் முன்னேற்றத்தையும் நிர்ணயிக்கும் உந்து சக்தி. எல்லோருக்கும் கொடுத்து இன்புற்று வாழ்க என்று இறைத்தூதர் நபிகள் நாயகம் கூறிய அறநெறியை பின்பற்றி இன்றளவும் இஸ்லாமிய சகோதரர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்து உவகையுடன் பக்ரீத் திருநாள் கொண்டாடி வருகிறார்கள். இஸ்லாமிய சகோதரர்களின் உன்னதமான ஈகை பண்பினை இந்தநாளில் போற்றுவோம். அனைவருக்கும் எனது இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்.

அமைச்சர் கந்தசாமி

இனத்தால், மதத்தால் வேறுபட்டிருந்தாலும், இந்தியர் எனும் உணர்வோடு ஒற்றுமையாய் நம்முடன் கரம்கோர்த்து வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் போற்றும் பக்ரீத் தியாக திருநாள் மனித வாழ்வியல் நெறியை வலியுறுத்தும் நாளாக திகழ்கிறது. இத்தகைய சகோதரப்பாசம் எத்தகைய காரணத்தினாலும் குலையாதவண்ணம், என்றென்றும் தொடர்ந்து இந்தியப் பெருமையை கட்டிக்காப்போமென உறுதியேற்று இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு பாசம் கலந்த பக்ரீத் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எம்.எல்.ஏ.க்கள் சிவா (தி.மு.க.), அன்பழகன், வையாபுரி மணிகண்டன் (அ.தி.மு.க.), அ.ம.மு.க. செயலாளர் வேல்முருகன், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் சஞ்சீவி மற்றும்பலர் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Next Story