மாயமான 8 மாத குழந்தையும் ஏரியில் பிணமாக மீட்பு ஆளில்லா குட்டி விமானம் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர்


மாயமான 8 மாத குழந்தையும் ஏரியில் பிணமாக மீட்பு ஆளில்லா குட்டி விமானம் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர்
x
தினத்தந்தி 1 Aug 2020 12:41 AM GMT (Updated: 1 Aug 2020 12:41 AM GMT)

ஏரியில் குதித்து பள்ளி ஆசிரியை தற்கொலை செய்த சம்பவத்தில் மாயமான 8 மாத குழந்தையும் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டது. ஆளில்லா குட்டி விமானம் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர்.

ஆவடி,

ஆவடியை அடுத்த சேக்காடு, டி.ஆர்.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 28). இவருடைய மனைவி புவனேஸ்வரி (25). இவர், தனியார் மழலையர் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இவர்களுடைய மகள்கள் இளவரசி (5), நிக்கிதா (3), தபித்தாள் (8 மாதம்).

கணவருடன் ஏற்பட்ட தகராறில் கடந்த 25-ந் தேதி புவனேஸ்வரி. கோபித்துக்கொண்டு தனது 8 மாத பெண் குழந்தை தபித்தாளுடன் வீட்டை விட்டு மாயமானார். 27-ந் தேதி காலையில் அப்பகுதியில் உள்ள கோவிந்தன்தாங்கல் ஏரியில் புவனேஸ்வரி பிணமாக கிடந்தார்.

புவனேஸ்வரி, கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஏரியில் குதித்து தற்கொலை செய்தது தெரிந்தது. ஆனால் நீண்டநேரம் ஏரியில் தேடியும் அவரது 8 மாத குழந்தையை காணவில்லை. எனவே குழந்தையை உறவினர்கள் யாரிடமாவது கொடுத்துவிட்டு அவர் மட்டும் தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்பட்டது. இது குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

ஆளில்லா குட்டி விமானம்

போலீசார் மற்றும் உறவினர்கள் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. மேலும் புவனேஸ்வரி வீட்டில் இருந்து வெளியே வரும் வழியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் புவனேஸ்வரி தனது 8 மாத பெண் குழந்தையுடன் நேராக ஏரி பகுதிக்கு நடந்து செல்வது தெரியவந்தது. எனவே அவர் குழந்தையுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்தது உறுதியானது. ஆனால் ஏரிக்கரையில் இருந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்தும் குழந்தை உடல் கிடப்பதாக தெரியவில்லை.

எனவே நேற்று காலை 10 மணியளவில் ஆவடி போலீசார் ஆளில்லா குட்டி விமானம்(டிரோன் கேமரா) மூலம் ஏரியில் குழந்தை உடல் மிதக்கிறதா? என தேட ஆரம்பித்தனர். சுமார் 2 மணிநேர தேடுலுக்கு பிறகு ஏரியின் கரையில் இருந்து சுமார் 20 அடி தூரத்திலேயே தண்ணீரில் படர்ந்து இருந்த பாசிகளுக்கு இடையில் உடல் அழுகிய நிலையில் புவனேஸ்வரியின் 8 மாத பெண் குழந்தை இறந்து கிடப்பது தெரியவந்தது.

குழந்தை உடல் மீட்பு

இதையடுத்து போலீசார், பொதுமக்கள் உதவியுடன் குழந்தையின் உடலை ஏரியில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை மாயமாகி ஒரு வாரம் ஆனதால் எங்காவது குழந்தை உயிரோடு இருக்காதா? என்ற ஏக்கத்தில் அவர்களது உறவினர்கள் இருந்தனர். ஆனால் தாயை தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு அதே ஏரியில் குழந்தையும் பிணமாக மீட்கப்பட்டதை அறிந்ததும் குழந்தையின் தந்தை மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

கணவருடன் ஏற்பட்ட தகராறில் 8 மாத குழந்தையுடன் ஏரியில் குதித்து பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story