புதுக்கோட்டை அருகே ரூ.8 லட்சத்தில் கண்மாய் வடிகால் தூர்வாரும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்


புதுக்கோட்டை அருகே ரூ.8 லட்சத்தில் கண்மாய் வடிகால் தூர்வாரும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 Aug 2020 1:25 AM GMT (Updated: 1 Aug 2020 1:25 AM GMT)

புதுக்கோட்டை அருகே ரூ.8 லட்சம் செலவில் கண்மாய் வடிகால் தூர்வாரும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

சாயர்புரம்,

புதுக்கோட்டை அருகே உள்ள குலையன்கரிசலில் இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.8 லட்சம் செலவில் கண்மாய் வடிகால் தூர்வாரி, கரை பலப்படுத்தும் பணி தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பணிகளை தொடங்கி வைத்தார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத்சிங் கலோன், தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவன துணை பொது மேலாளர் கவுதம், முதன்மை கட்டுமான மேலாளர் முருகேசன், கட்டுமான மேலாளர் ரமேஷ்பாபு, குலையன்கரிசல் விவசாய சங்க தலைவர் சுபாஷ் செல்வகுமார், செயலாளர் ஜெகன், கவுரவ தலைவர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

ரூ.13 கோடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் குடிமராமத்து திட்டத்தின்கீழ் பல்வேறு கண்மாய்கள் தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொதுப்பணித்துறை மூலம் 37 கண்மாய்கள் ரூ.13 கோடியே 15 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் சமூக பொறுப்பு நிதியின் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, மழைநீரினை சேமித்து நிலத்தடி நீர் உயர்த்துவதற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் பல்வேறு இடங்களில் கண்மாய்கள் தூர்வாரி ஆழப்படுத்தப்படுகிறது.

சேமிக்க முடியும்

அந்த வகையில் குலையன்கரிசல் பஞ்சாயத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம் சார்பில் ரூ.8 லட்சம் செலவில் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. வடிகால் வாய்க்காலை ஆழப்படுத்தி 4.8 கிலோமீட்டர் தூரம் கரைகளை பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளை விரைவில் முடிக்க ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுமார் 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

அத்திமரப்பட்டி, பொட்டல்காடு, குலையன்கரிசல் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் கண்மாயில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரினை வாய்க்கால் மூலம் கொண்டு சென்று பயன்படுத்தி விவசாயம் செய்து பயன்பெற முடியும். பல்வேறு திட்டங்களின் மூலம் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் தூர்வாரி ஆழப்படுத்துவதால், தண்ணீரை அதிக அளவு சேமித்து வைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story