சாத்தான்குளம் போலீசார் தாக்கியதாக வழக்கு: தொழிலாளியிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை


சாத்தான்குளம் போலீசார் தாக்கியதாக வழக்கு: தொழிலாளியிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை
x
தினத்தந்தி 1 Aug 2020 1:29 AM GMT (Updated: 1 Aug 2020 1:31 AM GMT)

சாத்தான்குளம் போலீசார் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக, தொழிலாளியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 பேரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையே சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் நடந்த ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார் கொலை வழக்கு தொடர்பாக, தெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்த துரையிடம் விசாரிப்பதற்காக, அவரை தேடிச் சென்ற போலீசார், அங்கு துரை இல்லாததால் அவருடைய தம்பி மகேந்திரனை (27) விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் விடுவித்த சில நாட்களில், மகேந்திரன் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

இதற்கிடையே ஜெயக்குமார் கொலை வழக்கில் கைதான, சாத்தான்குளம் அருகே மேல பனைகுளத்தைச் சேர்ந்த தொழிலாளி ராஜாசிங் (வயது 36) என்பவரும், கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரது தொடையின் பின்பகுதியில் படுகாயத்துடன் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் தன்னையும் சாத்தான்குளம் போலீசார் தாக்கியதாக கூறி, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ராஜாசிங்கிடம் தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 6 போலீசார் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

தொழிலாளியிடம் விசாரணை

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சபிதா தலைமையிலான போலீசார் நேற்று சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கு ஜெயக்குமார் கொலை வழக்கு மற்றும் ராஜாசிங் தாக்கப்பட்ட வழக்கு உள்ளிட்ட வழக்குகள் தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டனர்.

பின்னர் சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்துக்கு சென்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். கொலை வழக்கில் கைதாகி படுகாயம் அடைந்த ராஜாசிங் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அவரை பேய்க்குளம் வருவாய் ஆய்வாளர் குடியிருப்புக்கு வரவழைத்து, அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

Next Story