நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் முழு ஊரடங்கு: மக்கள் வீடுகளில் முடங்கினர் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின


நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் முழு ஊரடங்கு: மக்கள் வீடுகளில் முடங்கினர் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 2 Aug 2020 10:30 PM GMT (Updated: 2 Aug 2020 5:39 PM GMT)

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் முழு ஊரடங்கால் நேற்று மக்கள் வீடுகளில் முடங்கினர். கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

நெல்லை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன்படி கடந்த 1-ந் தேதி 7-வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

ஆகஸ்டு மாதத்தில் உள்ள 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லா முழுமையான ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நெல்லை மாநகர பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. நெல்லை டவுன், பாளையங்கோட்டை, தச்சநல்லூர் ஆகிய மண்டல பகுதியில் 100 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. நெல்லை புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள கடைகளும் அடைக்கப்பட்டன. ஆட்டோக்கள் ஓடவில்லை. பாளையங்கோட்டை மகராஜநகர் பகுதியில் 3 பூங்காக்களில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தைகள், பாளையங்கோட்டை போலீஸ் குடியிருப்பு பகுதி மற்றும் பொருட்காட்சி திடலில் உள்ள தற்காலிக காய்கறி கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

நெல்லை டவுன் ஆர்ச் பகுதியிலும், பாளையங்கோட்டை பெல் மைதானத்திலும் ஆடு, கோழி, மீன் போன்ற இறைச்சி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். நேற்று ஊரடங்கால் அனைத்து இறைச்சி கடைகளும் அடைக்கப்பட்டன.

மாநகர பகுதியில் உள்ள பால், மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன. டீக்கடைகள், ஓட்டல்கள், பெட்டிக்கடைகள், பலசரக்கு கடைகள், ஜெராக்ஸ் கடைகள், இரும்பு கடைகள், பிளேவுட் கடைகள், ஜவுளி கடைகள், கம்ப்யூட்டர் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடந்தனர். இதனால் நெல்லை மாநகர பகுதி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலம், வண்ணார்பேட்டை ரவுண்டானா, வடக்கு புறவழிச்சாலை, திருவனந்தபுரம் ரோடு, மேலப்பாளையம் ரவுண்டானா, அம்பை சாலை, நெல்லை டவுன் ரத வீதிகள் உள்ளிட்ட பகுதிகள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். நேற்று வாகனங்கள் எதுவும் ஓடாததால் அந்த சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முழுஊரடங்கால் நெல்லை முடங்கியது.

நெல்லை மாநகர பகுதியில் முக்கிய சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆங்காங்கே இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களை போலீசார் நிறுத்தி விளக்கம் கேட்டனர். அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதேபோல் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தூத்துக்குடியில் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மாவட்டம் முழுவதும் கடைகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டு இருந்தன. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.

அதே நேரத்தில் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே முக்கிய சந்திப்புகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு சிலர் வாகனங்களில் சுற்றித்திரிந்தனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

தென்காசியில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார், கன்னிமாரம்மன் கோவில் தெரு, கூலக்கடை பஜார், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகிய அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

போலீசார் ஆங்காங்கே நின்று சாலையில் வரும் வாகனங்களை சோதனை செய்தனர். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? எதற்காக வருகிறார்கள்? என்பதை விசாரித்து உரிய காரணங்களை கூறுபவர்களை அனுப்பினார்கள். காரணமில்லாமல் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன.

Next Story