பொது இடங்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகங்களில் சேர்க்க வேண்டும் - அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


பொது இடங்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகங்களில் சேர்க்க வேண்டும் - அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 Aug 2020 11:43 PM GMT (Updated: 3 Aug 2020 11:43 PM GMT)

பொது இடங்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகங்களில் சேர்க்க வேண்டும் என அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் கற்பகம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “தமிழகத்தில் உள்ள பல்வேறு பொது இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றித்திரிகின்றனர். அவர்களில் பலருக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளது. ஆனால் அவர்களுக்கு போதுமான உணவு, தங்குமிடம் இல்லை. எனவே தமிழக அரசு அவர்களைக் கண்டறிந்து முகாம்களுக்கு அனுப்பி நோய்த் தொற்றை சரிசெய்ய உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் நேற்று காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில், பழனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றித்திரிவதாக கூறப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், “தமிழகம் முழுவதும் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களை அரசு காப்பகத்தில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை வருகிற 18-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Next Story