பிறந்தநாள் வாழ்த்து தொண்டர்களை சந்திப்பதை தவிர்த்த ரங்கசாமி


பிறந்தநாள் வாழ்த்து தொண்டர்களை சந்திப்பதை தவிர்த்த ரங்கசாமி
x
தினத்தந்தி 4 Aug 2020 8:07 PM GMT (Updated: 4 Aug 2020 8:07 PM GMT)

கொரோனா அச்சுறுத்தலையொட்டி பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த தொண்டர்களை சந்திப்பதை ரங்கசாமி தவிர்த்தார்.

புதுச்சேரி,

என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமி பிறந்தநாளின்போது புதுவையில் திருவிழா போல் களை கட்டும். திரும்பிய பக்கமெல்லாம் அலங்கார வளைவுகள், விளம்பர பதாகைகள் என விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்தநிலையில் ரங்கசாமியின் பிறந்தநாளான நேற்று இவையெல்லாம் காணாமல் போய் இருந்தன.

கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளதாலும், ரங்கசாமிக்கு நெருக்கமாக இருந்தவரும் என்.ஆர். காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பாலன் சமீபத்தில் மறைந்ததாலும் இந்த முறை பிறந்தநாளை கொண்டாட ரங்கசாமி விரும்பவில்லை. தொண்டர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டாம் என்று கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

சந்திப்பை தவிர்த்தார்

இந்தநிலையில் தனது பிறந்த நாளையொட்டி நேற்று காலை கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ரங்கசாமி கலந்துகொண்டார். இதையொட்டி அங்கு கட்சியின் முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என யாரும் அனுமதிக்கப்படவில்லை. சிறப்பு பூஜைக்குப் பிறகு அங்கிருந்து ரங்கசாமி புறப்பட்டுச் சென்றார்.

பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க ரங்கசாமியின் வீடு முன் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். பிறந்தநாளின்போது ரங்கசாமி தனது வீட்டில் பல மணி நேரம் நின்றபடி தொண்டர்களின் வாழ்த்துக்களை பெறுவது வழக்கம். ஆனால் நேற்று தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்திப்பதை தவிர்த்து வீட்டில் இருந்து ரங்கசாமி வெளியே சென்றுவிட்டார். இருந்தபோதிலும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் அந்தந்த தொகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கி ரங்கசாமியின் பிறந்தநாளை கொண்டாடினர்.

Next Story