துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் ரூ.52 லட்சம் தங்கம் கடத்தல் 5 பேர் கைது


துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் ரூ.52 லட்சம் தங்கம் கடத்தல் 5 பேர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2020 12:57 AM GMT (Updated: 5 Aug 2020 12:57 AM GMT)

துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ.52 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கஇலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 5 பேரை கைது செய்தனர்.

ஆலந்தூர்,

கொரோனா ஊரடங்கால் துபாயில் சிக்கி தவித்த 180 பேருடன் சிறப்பு விமானம் நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்தவர்கள், விமான நிலையத்தில் மருத்துவம், குடியுரிமை, சுங்கச்சோதனைகள் முடித்துக்கொண்டு 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்காக விமான நிலையத்தில் இருந்து ஓட்டல்கள் மற்றும் அரசின் இலவச தங்கும் இடங்களுக்கு அழைத்துச்செல்ல தனித்தனி பஸ்களில் ஏற்றினர்.

சென்னை கேளம்பாக்கம் அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு 78 பேரை ஏற்றிக்கொண்டு 3 சிறப்பு தனி பஸ்கள் புறப்பட தயாரானது. அப்போது ஒரு பஸ் அருகே நின்றிருந்த மர்மஆசாமி, பஸ்சில் இருந்த ஒரு பயணியிடம் பணத்தை கொடுத்துவிட்டு, அவர் கொடுத்த பார்சலை வாங்கி அவசரமாக தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்தார். பின்னர் அந்த பஸ்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டன.

1 கிலோ தங்கம்

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த விமான நிலைய போலீசார், இதை பார்த்தனர். மர்ம ஆசாமியிடம், “எதற்காக பணம் கொடுத்தாய்?, பஸ்சில் இருந்தவர் கொடுத்த பார்சலில் என்ன இருக்கிறது?” என்று விசாரித்தனர்.

அதற்கு மர்மஆசாமி, “பஸ்சில் இருந்தவருக்கு நான் செலவுக்கு பணம் கொடுத்தேன். அவர் கொடுத்த பார்சலில் அவருடைய பழுதடைந்த வாட்ச், மருந்து சீட்டுகள்தான் இருக்கின்றன” என்றார். ஆனாலும் போலீசார் சந்தேகத்தில் அந்த பார்சலை பிரித்து பார்த்தனர்.

அதனுள் 4 சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் இருந்தன. அதன் ஒவ்வொன்றிலும் கால் கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன. அவரிடம் மொத்தம் ரூ.52 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கம் இருந்தது.

சுங்கத்துறையிடம் ஒப்படைப்பு

இதையடுத்து போலீசார், பிடிபட்ட தங்கத்தையும், மர்ம ஆசாமியையும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சிறப்பு விமானத்தில் வந்தவர்களில் 4 பேர் தலா கால் கிலோ தங்கத்தை மறைத்து கடத்தி வந்தனர்.

சுங்கத்துறை சோதனை முடிந்து வெளியே வந்ததும், அவர்களில் ஒருவர் மற்ற 3 பேரிடமும் இருந்த தங்கத்தை வாங்கி தன்னிடமிருந்த தங்கத்தையும் சேர்த்து பஸ்சில் ஏறினார். அதன் பின்பு பஸ் அருகே நின்றிருந்தவரிடம் தங்கத்தை கொடுத்து உள்ளார் என தெரியவந்தது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் மேலக்கோட்டையூர் கல்லூரிக்கு சென்று தங்கம் கடத்தி வந்த 4 பேரையும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவித்து விசாரணைக்காக சென்னை விமான நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

5 பேர் கைது

விசாரணையில், துபாய் விமான நிலையத்தில் 2 ஆசாமிகள் தங்கக்கட்டிகளை கொடுத்ததாகவும், பணத்துக்கு ஆசைப்பட்டு தங்கத்தை வாங்கி வந்ததாகவும் கூறினர். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் சிறப்பு விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 4 பேர், அவர்களிடம் பணத்தை கொடுத்து தங்கத்தை வாங்கியவர் என 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் சென்னை, திருச்சி, சிவகங்கை பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

சென்னை விமான நிலையத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து தங்கம் கடத்தல் அதிகஅளவில் நடப்பதாகவும், இதற்கும் கேரளா தங்கம் கடத்தல் ஸ்வப்னா சுரேஷ் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்று என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் சிறப்பு விமானத்தில் துணிச்சலாக ரூ.52 லட்சம் மதிப்புடைய 1 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்டு கைதான 5 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story