“கொரோனா இறப்பு விகிதத்தை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை” சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி


“கொரோனா இறப்பு விகிதத்தை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை” சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 6 Aug 2020 1:39 AM GMT (Updated: 6 Aug 2020 1:39 AM GMT)

கொரோனாவால் பலியானவர்களின் இறப்பு விகிதத்தை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நெல்லை,

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சுசுாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அதன்படி நேற்று நெல்லை மாவட்டத்தில் ஆய்வு பணி மேற்கொள்ள வந்த அவர், நெல்லை மாநகர பகுதியில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பாளையங்கோட்டை ஆயுதப்படை குடியிருப்பு பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.

அப்போது அங்கு நடந்த மருத்துவ முகாம், கொரோனா பரிசோதனை முகாம் ஆகியவற்றை பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் கலந்துரையாடி, கொரோனா பாதிப்புகள், சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகளிலும் சென்று ஆய்வு நடத்தினார்.

தொடர்ந்து நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் ஷில்பா, மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் வரதராஜன், மாநகர நல அலுவலர் சரோஜா, டாக்டர்கள் சாந்தாராம், அழகேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

1.18 லட்சம் படுக்கைகள் தயார்

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால், தொற்று பரவல் குறைந்து வருகிறது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில்தான் 28 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தினமும் 60 ஆயிரம் பேருக்கு, 125 பரிசோதனை மையங்களில் பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனாவை ஒழிக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் 1 லட்சத்து 18 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. முன்பு ஆஸ்பத்திரிகளில் 75 ஆயிரம் படுக்கைகள் இருந்தன. தற்போது அதை 1 லட்சத்து 18 ஆயிரமாக உயர்த்தி உள்ளோம். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்த ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.75 கோடிக்கான பணிகள் முடிவடைந்து உள்ளன.

114 இடங்களில் நோய் தொற்று

நெல்லை மாவட்டத்தில் 114 இடங்கள் நோய் தொற்று பகுதியாக கண்டறியப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு முக கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநகர பகுதியை போன்று அம்பை, வள்ளியூர் பகுதியிலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால், அங்கு மகளிர் சுய உதவி குழுவினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவம், ஓமியோபதி மருந்துகளும் வழங்கப்பட்டு வருகிறது.

முன்பு 100 பேருக்கு பரிசோதனை நடத்தினால் 20.2 பேர் என்ற வீதத்தில் கொரோனா தொற்று இருந்தது. அந்த சதவீதம் தற்போது குறைந்து வருகிறது. இதேபோல் இறப்பு விகிதமும் குறைந்து உள்ளது.

இறப்பு கணக்கு

நெல்லை மாவட்டத்தில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். குறைபாடுகளை களைவதற்கு டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. கொரோனா நோய் தொற்று ஏற்பட்டாலும் இருதய நோய், நுரையீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட நோய்களால்தான் ஏராளமானவர்கள் இறக்கிறார்கள். இறப்பு விகிதத்தை குறைத்து காட்டவேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறுவனுக்கு பாராட்டு

பாளையங்கோட்டை ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தியபோது, அங்குள்ள சிறுவனிடம் கொரோனா பற்றி உனக்கு தெரியுமா? என்று கேட்டார்.

உடனே அந்த சிறுவன் கொரோனா தொற்று சமூக இடைவெளியை கடைபிடிக்காததாலும், முககவசம் அணியாததாலும்தான் பரவுகிறது எனவே அனைவரும் முககவசம் அணியவேண்டும். மக்கள் கூட்டமாக நிற்க கூடாது என்று கூறினார். உடனே அந்த சிறுவனை அவர் பாராட்டினார்.

Next Story