நெல்லை, தென்காசி மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நெல்லை, தென்காசி மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2020 1:50 AM GMT (Updated: 6 Aug 2020 1:50 AM GMT)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தென்காசி,

நெல்லை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மேலப்பாளையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கனி தலைமை தாங்கினார். காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை மத்திய அரசு கைவிட வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும், கொரோனா வைரசை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சாகுல் ஹமீது உஸ்மானி, அகமது சலபி, ஹயாத் முகமது, அலாவுதீன், முஸ்தபா உள்பட பலர் கலந்து கொண்டனர். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேட்டை, ஏர்வாடி, களக்காடு, வள்ளியூர், மேலச்செவல், பத்தமடை, சேரன்மாதேவி, வீரவநல்லூர், அம்பை, விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட 14 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்காசி

இதேபோல் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சீனா சேனா சர்தார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாதுஷா, நகர துணை செயலாளர் பீர் முகம்மது, நகர செயற்குழு உறுப்பினர் ஜாபர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நெல்லை மண்டல தலைவர் திப்பு சுல்தான், மாவட்ட செயலாளர் அப்துல் பாசித், நகர தலைவர் செய்யது அலி பாதுஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 20 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

கடையநல்லூர்

இதேபோல் கடையநல்லூர் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர் யாசர் கான் தலைமையில் கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ஹக்கீம், எஸ்.டி.பி.ஐ. கட்சி தொகுதி தலைவர் கனி, துணை தலைவர் பாதுஷா, நகர செயலாளர் அப்துல் காதர், இணை செயலாளர் அசாருதீன், மருத்துவ அணி தலைவர் சாதிக், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நகர தலைவர் துராப் சைபுல்லா ஹாஜா, நகர செயலாளர் முகம்மது கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் கடையநல்லூர் போலீசார், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 55 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலை நேரத்தில் மணிக்கூண்டு அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story