மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை: குற்றாலத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை: குற்றாலத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 7 Aug 2020 1:32 AM GMT (Updated: 7 Aug 2020 1:32 AM GMT)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, குற்றாலத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவியிலும் தண்ணீர் கொட்டுகிறது.

நெல்லை,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குற்றாலத்திலும் அவ்வப்போது பலத்த மழையும், தொடர்ந்து சாரல் மழையும் விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது. நேற்று முன்தினம் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

இரவில் பலத்த மழை பெய்ததால், குற்றாலம் அருவிகளில் நேற்று மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி கொட்டுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக, அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அருவிகளுக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டு, அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அருவிக்கரைகள் வெறிச்சோடி கிடந்தன.

மணிமுத்தாறு 2 அடி உயர்வு

நெல்லை மாவட்டம் அம்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி போன்ற தேயிலைத்தோட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அருவியை மூழ்கடித்தபடி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.

மேலும், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 1,281 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 66 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 55 கன அடி தண்ணீர் பெருங்கால் வழியாக திறந்து விடப்பட்டு உள்ளது.

பாபநாசம் அணை நீர்மட்டம் 3½ அடி உயர்வு

இதேபோன்று 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 2,775 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 754.75 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3½ அடி உயர்ந்து 74.50 அடியாக உள்ளது. இதனுடன் இணைந்த 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையிலும் ஒரே நாளில் 2.36 அடி நீர்மட்டம் உயர்ந்து 93.40 அடியாக உள்ளது.

இதேபோல் கொடுமுடியாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் ஆகிய அணையின் நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது.

மழை அளவு விவரம்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பாபநாசம்-40, சேர்வலாறு-51, மணிமுத்தாறு-13, கொடுமுடியாறு-50, அம்பை-6, சேரன்மாதேவி-6, நாங்குநேரி- 4, பாளையங்கோட்டை-3.40, ராதாபுரம்-27.40, நெல்லை-4, கடனாநதி-16, ராமநதி-8, கருப்பாநதி-32, குண்டாறு- 38, அடவிநயினார்-31, ஆய்க்குடி-7.20, தென்காசி-17, செங்கோட்டை-22.

Next Story