கும்மிடிப்பூண்டி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை


கும்மிடிப்பூண்டி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 10 Aug 2020 12:37 AM GMT (Updated: 10 Aug 2020 12:37 AM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு அருகே உள்ளது செதில்பாக்கம் கிராமம். இங்கு வசித்து வந்தவர் ரோஜா (வயது 56). இவரது மகன் வெங்கடேசன் (35). இவருக்கும் இவரது உறவினர்களான குமார், மைக்கேல் உள்பட சிலருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 6-ந்தேதி வெங்கடேசனின் குடும்பத்தினர் தாக்கப்பட்டனர். அங்கிருந்த காரின் கண்ணாடியும் சேதப்படுத்தப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் பாதிரிவேடு போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் வெங்கடேசனின் உறவினர்கள் அவரது தாய் மற்றும் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால் ரோஜா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதையடுத்து அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பாதிரிவேடு போலீசார் அவரது உறவினர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.


Next Story