வேலூர், திருவண்ணாமலையில் சிகிச்சை பெற்றுவந்த 2 பெண்கள் உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலி


வேலூர், திருவண்ணாமலையில் சிகிச்சை பெற்றுவந்த 2 பெண்கள் உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 10 Aug 2020 2:05 AM GMT (Updated: 10 Aug 2020 2:05 AM GMT)

வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

வேலூர்,

வேலூரில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூர் தனியார் மருத்துவமனையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேபோன்று திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் பலர் கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

வேலூர் மற்றும் திருவண்ணாமலை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 2 பெண்கள் உள்பட 10 பேர் நேற்று ஒரே நாளில் பலியாகி உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

வேலூர்

காட்பாடி ஸ்ரீபாலாஜி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 60). இவர் கடந்த மாதம் 26-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோன்று குடியாத்தம் காளியம்மன்பட்டியை சேர்ந்த சிங்காரவேலு (86) என்பவர் கடந்த 7-ந் தேதி கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வேலூர் மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 2 பேரின் உடல்களும் பாதுகாப்பாக அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குடியாத்தம் தங்கம்நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (58). கார் மெக்கானிக். கடந்த சில தினங்களாக உடல் நிலை சரியில்லாததால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சையில் இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜன் பரிதாபமாக இறந்தார்.

குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை வில்வநாதன் தெருவை சேர்ந்தவர் நரசிம்மன் (55). தச்சுத் தொழிலாளி. கொரோனா தொற்று காரணமாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நரசிம்மன் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இவர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை கொரோனா தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் ராஜேந்திரன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கலசபாக்கம் தாலுகா வில்வாரணியை சேர்ந்த பராசக்தி (40) என்பவர் காய்ச்சல் காரணமாக கடந்த 3-ந் தேதி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அங்கு சிகிச்சைபெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செய்யாறு தாலுகா கொருக்காத்தூர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (62) என்பவர் உடல் நல குறைவால் கடந்த 1-ந் தேதி வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கீழ்பென்னாத்தூர் தாலுகா ராஜந்தாங்கல் பகுதியை சேர்ந்த போபன்னா (85) என்பவர் கடந்த 3-ந் தேதி சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை அடிஅண்ணாமலை பகுதியை சேர்ந்த அபிதா (68) என்பவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கொரோனாவுக்கு சிகிச்சைபெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆரணி தாலுகா விண்ணமங்கலம் அருகில் உள்ள அணைக்கரை பகுதியை சேர்ந்த அண்ணாமலை (90) என்பவர் கடந்த 4-ந் தேதி வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Next Story