மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக மண் பரிசோதனை மீண்டும் தொடங்கியது


மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக மண் பரிசோதனை மீண்டும் தொடங்கியது
x
தினத்தந்தி 12 Aug 2020 12:25 AM GMT (Updated: 12 Aug 2020 12:25 AM GMT)

கொரோனா காரணமாக கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரெயில் திட்ட மண் பரிசோதனை செய்யும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை, 

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாதவரம் முதல் சிப்காட், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் மற்றும் கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரை 3 கட்டங்களாக 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த 3 திட்டத்துக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் விரிவான வடிவமைப்புகளை இறுதி செய்துள்ளது.

மாதவரம்-கோயம்பேடு மற்றும் மாதவரம்-சோழிங்கநல்லூர் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. பணிகளை தொடங்குவதற்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் முதல் கட்டமாக சுரங்கப்பாதைகள் அமைக்க ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன. மேலும் மண் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டன.

நிலம் கையகப்படுத்தும் பணி

இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக மண் பரிசோதனை உள்ளிட்ட ஆரம்ப கட்டப்பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது, 2-ம் கட்டப் பணிக்கான மண் பரிசோதனை நகர்ப்புற பகுதியில் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இதேபோல கட்டுமான பணிகளை தொடங்குவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளும் விறுவிறுப்பு அடைந்துள்ளது. இந்த திட்டத்துக்கு தேவையான நிதியை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் கடனாக வழங்க உள்ளது.

மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி போன்ற பிற வங்கிகளிடம் இருந்து நிதியுதவி பெற கையெழுத்திடுவதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது இறுதி செய்யப்படலாம் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story