சுதந்திர தின நாளில் 97 வயது தியாகி மனைவியுடன் உண்ணாவிரதம் ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு


சுதந்திர தின நாளில் 97 வயது தியாகி மனைவியுடன் உண்ணாவிரதம் ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 16 Aug 2020 4:51 PM GMT (Updated: 16 Aug 2020 4:51 PM GMT)

ஜோலார்பேட்டை அருகே சுதந்திரதின நாளில் 97 வயது தியாகி ஒருவர் மனைவியுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதுபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராம பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 97), சுதந்திர போராட்ட தியாகி. கூரை வேய்ந்த வீட்டில் வசித்து வருகிறார். சுதந்திர தின நாளான நேற்று இவர் தனது மனைவியுடன் வீட்டின் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தள்ளாத வயதில் அதுவும் சுதந்திர தின நாளில் இவர் உண்ணாவிரதம் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான எந்த ஒரு அடிப்படை நலத்திட்ட உதவிகளையும் மத்திய-மாநில அரசுகள் செய்யவில்லை. சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களில் ஒருவனாகிய நான் குடிசை வீட்டில் கஷ்டப்பட்டு வருகிறேன். எனது குடும்பத்தில் மனைவி உள்பட 18 பேர் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறோம். மத்திய அரசு வழங்கும் பென்ஷன் உதவியை பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு 15 ஏக்கர் இலவச நிலம் வழங்க வேண்டும். எனது சொந்த இடத்தை பட்டாவில் அரசு வழிப்பாதை என்று தவறுதலாக குறிப்பிட்டுள்ளதை திருத்தி பட்டா வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை கலெக்டரிடம் மனு அளித்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் சுதந்திர தினத்தன்று எனது மனைவியுடன் உண்ணாவிரதம் இருக்கிறேன். இதுகுறித்து வருகிற 25-ந்தேதிக்குள் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் திருப்பத்தூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் இருக்க போகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பரிவுடன் கேட்டனர்

இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் மண்டல துணை தாசில்தார் காஞ்சனா, கிராம நிர்வாக அலுவலர்கள் மணிகண்டன், சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து நாராயணசாமியிடம் கோரிக்கைகள் குறித்து பரிவுடன் கேட்டறிந்தனர்.

அவர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துவிட்டு சென்றனர். இதனையடுத்து கணவன்- மனைவி இருவரும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர். 

Next Story