கர்நாடகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா சீனிவாச பிரசாத் எம்.பி.க்கும் வைரஸ் தொற்று


கர்நாடகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா சீனிவாச பிரசாத் எம்.பி.க்கும் வைரஸ் தொற்று
x
தினத்தந்தி 18 Aug 2020 11:30 PM GMT (Updated: 18 Aug 2020 11:30 PM GMT)

கர்நாடகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கும், சீனிவாச பிரசாத் எம்.பி.க்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளை கொரோனா தொடர்ந்து தாக்கி வருகிறது. முதல்-மந்திரி எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, மந்திரிகள் சி.டி.ரவி, பி.சி.பட்டீல், ஆனந்த்சிங், எஸ்.டி.சோமசேகர், ஸ்ரீராமுலு, எம்.பி.க்கள் சுமலதா(மண்டியா), பகவந்த் கூபா(பீதர்), சுயேச்சை எம்.எல்.ஏ. சரத் பச்சேகவுடா, பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என 41 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

சாம்ராஜ்நகர் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வருபவர் சீனிவாச பிரசாத். இவர் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சீனிவாச பிரசாத் எம்.பி. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். மேலும் அவருக்கு கொரோனா அறிகுறியும் தென்பட்டது. இதனால் அவர் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தார். இந்த நிலையில் நேற்று சீனிவாச பிரசாத் எம்.பி.யின் மருத்துவ அறிக்கை சுகாதாரத்துறையினருக்கு கிடைத்தது. இதில் சீனிவாச பிரசாத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பெங்களூரு பழைய விமான நிலைய ரோட்டில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகனும், கர்நாடக பா.ஜனதா கட்சியின் துணை தலைவருமான விஜயேந்திரா, சீனிவாச பிரசாத்தை சந்தித்து பேசி இருந்தார். இதனால் அவருக்கும் கொரோனா பீதி ஏற்பட்டு உள்ளது. மேலும் சீனிவாச பிரசாத்துடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்

இதுபோல பெங்களூரு சாம்ராஜ்பேட்டை தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ஜமீர் அகமதுகான். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் ஜமீர் அகமதுகான் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டார். நேற்று கிடைத்த மருத்துவ அறிக்கையில் ஜமீர் அகமதுகானுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதனால் அவர் பெங்களூருவில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ.வும் உறுதி செய்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு லேசான காய்ச்சல் இருந்தது. இதனால் என்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தேன். தற்போது எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. டாக்டரின் அறிவுரையின்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் பூர்ணிமா சீனிவாஸ். இவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் பூர்ணிமா சீனிவாஸ் எம்.எல்.ஏ., அவரது கணவர் சீனிவாஸ், கார் டிரைவர் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இதில் பூர்ணிமா சீனிவாஸ் எம்.எல்.ஏ.வுக்கும், அவரது கார் டிரைவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள வீட்டில் பூர்ணிமா சீனிவாஸ் எம்.எல்.ஏ. தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். பூர்ணிமா சீனிவாசுடன் சேர்ந்து கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்து உள்ளது. கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் பெண் எம்.எல்.ஏ. பூர்ணிமா சீனிவாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story